மதுரை ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்து காவல்துறை அதிரடி!
மதுரை: மதுரையில் அக்.8ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறைமறுப்பு தெரிவித்துள்ளது.
விஜயதசமியையொட்டி ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணிகளை நடத்துவது வழக்கம். வரும் 8ம் தேதி மதுரையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைப்பார் என போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்ட நிலையில், அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர், தனது அனுமதி இன்றியே இவ்வாறு போஸ்டர்கள் அடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
திராவிட அமைப்புகள் பலவும், இந்த பேரணிக்கு அனுமதிக்க கூடாது என்று, போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்திருந்தன. இதுகுறித்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கொடுக்க முடியாது என கூறியது. ஊர்வல வழியில் மருத்துவமனைகள் இருப்பதால் அனுமதி தர முடியாது என காவல்துறை கூறியது.
எனவே வழக்கை வரும் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், மதுரை துணை கமிஷனரும், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும் கலந்து ஆலோசனை நடத்தி, அன்றைய தினம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
பாஜகவின் தாய் அமைப்பு என்று கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.