மதுரை: டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
மதுரை: மதுரையில் ஏ.வி. மேம்பாலம் அருகே லாரியின் கீழே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
மதுரை சின்ன சொக்கிகுளம் கமலா தோப்பு தெருவைச் சேர்ந்த வேதநாயகம் செல்வகுமார் (37) என்பவர் தனது உறவினருக்குச் சொந்தமான லாரியை நிர்வகித்து வந்தார். கடந்த 3ம் தேதி இரவு, ஏ.வி. பாலம் கீழ்பகுதிக்குச் செல்லும் சாலையோரம் தனது லாரியை நிறுத்தியிருந்தார் செல்வகுமார்.

அப்போது 10.30 மணியளவில் மர்மநபர்கள் சிலர் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை லாரிக்கு அடியில் வீசி சென்றனர். இதில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் ஹெட்லைட் சேதமடைந்தது.
இந்த சம்பவம் குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
குண்டு வெடித்த லாரியை சோதனை செய்தபோது சிறிய பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் டப்பா, சணல் துண்டுகள், கடிகாரம் போன்ற அமைப்பு, பேட்டரி ஆகியன கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் குறித்து தென் மண்டல ஐ.ஜி. முருகன், மாநகர காவல் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
மேலும், சிறப்பு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை பிடிக்கவும் அவர் உத்தரவிட்டார். கடந்த ஆண்டு மதுரையில், அரசுப் பேருந்துகளில் குண்டுவெடித்த சம்பவத்தை போல இச்சம்பவம் இருப்பதால், இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications