சசிகலா அண்ணன் மகன் மகாதேவன் உடல் தகனம் செய்யப்பட்டது.. சசிகலா வரவில்லை
சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனின் உடல் இன்று தஞ்சாவூரில் தகனம் செய்யப்பட்டது.
தஞ்சை: சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனின் உடல் இன்று தஞ்சாவூரில் தகனம் செய்யப்பட்டது.
சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மகன், மகாதேவன் (47) தஞ்சையில் வசித்து வந்தார். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, ஜெ. பேரவை மாநில செயலாளராக சில காலம் இவர் பணியாற்றியவர். தஞ்சை வட்டாரத்தில் அதிமுகவில் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளவர் மகாதேவன்.
இந்நிலையில், நேற்று, திருவிடைமருதூர் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக மகாதேவன் சென்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நிலைமை மோசமாக இருந்ததால், அவர் கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், கும்பகோணம் மருத்துவமனையில் அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், மகாதேவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மகாதேவன் இறந்த செய்தி கேட்டதும், சிறையில் சசிகலா, கண்ணீர் விட்டு அழுதார்.
சசியின் நெருங்கிய உறவினரான மகாதேவன் உயிரிழந்திருப்பதால், கர்நாடகா சிறையில் இருக்கும், சசிகலா பரோலில் வருவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரத்த சம்பந்த உறவினர் மரணமடைந்தால் மட்டுமே, 'பரோல்' கொடுக்கப்படும் என்ற விதி உள்ளது. இதனால் அவருக்கு பரோல் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மகாதேவனின் உடல் தஞ்சாவூரில் இன்று தகனம் செய்யப்பட்டது. இதில் சசிகலா கணவர் நடராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.