கடலூர் அருகே தீவிரவாதிகள் 2 பேர் கைது! சென்னை குண்டுவெடிப்பில் "ஸ்லீப்பர்" செல்லாக செயல்பட்டனரா?
சிதம்பரம்: கடலூர் பரங்கிப்பேட்டையில் பதுங்கியிருந்த ராஜஸ்தான் மாநில இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த அஷ்ரப் உட்பட 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தங்கியிருந்த 12 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இரட்டை குண்டுவெடிப்புக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜோத்பூர் லைகன் மோகராவில் வசிக்கும் ஷபீர்அலி மகன் அஷ்ரப் அலி. இந்திய முஹாஜிதீன் அமைப்பைச் அந்த மாநிலத்தில் தீவிரமாக செயல்பட வைத்தவர்தான் அஷ்ரப் அலி என்று கூறப்படுகிறது.
மேலும் ஜெய்ப்பூர், புனே, பாட்னா, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அஷ்ரப் அலியை போலீசார் தேடி வந்தனர். இந்த சம்பவங்களில் அஷ்ரப் அலிதான் முதல் குற்றவாளி.
செல்போன் டவர் மூலம் சிக்கிய அஷ்ரப்
இச்சம்பவங்களில் மொத்தம் 5 பேர் தேடப்பட்டு வந்தனர். இவர்களில் 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த 4 பேரும் சிக்கியது தெரியாமல் தொடர்ந்தும் அவர்களுடன் அஷ்ரப் அலி செல்போனில் பேசி வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அஷ்ரப் அலியின் செல்போன் மூலம் இருப்பிடத்தை ராஜஸ்தான் போலீசார் தெரிந்து கொண்டனர். பின்னர் தமிழக போலீசார் உதவியுடன் நேற்று நள்ளிரவு பரங்கிப்பேட்டையை தமிழக மற்றும் ராஜஸ்தான் போலீசார் முற்றுகையிட்டனர்.
பின்னர் அஷ்ரப் அலி உட்பட இருவரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களுடன் தங்கியிருந்த 12 பேரையும் போலீசார் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை குண்டுவெடிப்பில் தொடர்பா?
இவர்களுக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பிருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஸ்லீப்பர் செல்கள் மூலம் சென்னை குண்டுவெடிப்பை அஷ்ரப் அலி செயல்படுத்தினாரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
யார் இந்த அஷ்ரப்?
தற்போது பிடிபட்டுள்ள அஷ்ரப், நிதா ஈ ஹக் என்ற உருது மொழி பத்திரிகையின் ஆசிரியர். ராஜஸ்தானின் ஜோத்பூரை தலைமையிடமாகக் கொண்டு வெளி வந்த இந்த பத்திரிகை, முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத இயக்கங்களில் இணைய இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பெரும்பாலும் முஸ்லிம் இளைஞர்களை ஸ்லீப்பர் செல்களாக எப்படியெல்லாம் செயல்பட் வைப்பது என்பதற்காக பயிற்சியையும் அஷ்ரப் அலி கொடுத்திருப்பதாக தெரிகிறது. கடந்த மார்ச் 23-ந் தேதி டெல்லி போலீசார் இந்தியன் முஜாஹிதீன் கமாண்டர் ரெஹ்மான் கைது செய்யப்பட்ட முதல் அஷ்ரப் அலி தலைமறைவாகிவிட்டார். அப்போது முதல் அஷ்ரப்பை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில்தான் அஷ்ரப்பின் கூட்டாளிகள் போலீசில் சிக்கியிருக்கின்றனர். அவர்கள் சிக்கியது தெரியாமல் அஷ்ரப்பும் செல்போனில் தொடர்பு கொள்ள இப்போது போலீசில் மாட்டிக் கொண்டதாக தெரியவந்துள்ளது.