ஏவுகணை நாயகன் அப்துல்கலாம் மணி மண்டபம்.... நாளை மோடி திறப்பு - கண்காணிப்பில் ராமேஸ்வரம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபம் நாளைத் திறக்கப்பட உள்ளது.
சென்னை: எழுச்சி நாயகன், மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். இதனையொட்டி ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள.
இந்தியாவின் குடியரசுத்தலைவராக இருந்த அப்துல் கலாம், மக்களின் மனங்களை வென்றவர். தனது பதவிக் காலத்துக்கு பின்னரும் ஓய்வெடுக்காமல் கல்லூரி, பள்ளி கருத்தரங்குகளில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார்.
மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவிற்குச் சென்றபோது அவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி காலமானார்.
அவரது உடல் ராமேஸ்வரத்தை அடுத்த பேக்கரும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு ரூ.15 கோடியில் மணி மண்டபம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. நாளை கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. ராமேஸ்வரம் வரும் பிரதமர் நரேந்திர மோடி மணிமண்டபத்தைத் திறந்து வைக்கிறார்.
மதுரைக்கு விமானம் மூலம்...
பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு நாளை காலை 10 மணிக்கு வருகிறார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு மண்டபம் முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைகிறார்.
தேசியக் கொடி
அதன்பின் கார் மூலம் புறப்பட்டு காலை 11.20 மணிக்கு அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றுகிறார். பின்பு மணிமண்டபத்தைத் திறந்துவைக்கிறார்.
அப்துல் கலாம் பிரசார வாகனம்
பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் ‘அப்துல்கலாம்-2020' என்ற சாதனை பிரசார வாகனத்தை பிரதமர் மோடி கொடி அசைத்துத் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து, அங்கிருந்து காலை 11.55 மணிக்குப் புறப்பட்டு மண்டபம் முகாம் அருகே இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வருகிறார். அங்கு ராமேஸ்வரம்-அயோத்தி இடையேயான புதிய ரயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் தொடங்கிவைக்கிறார்.
யார் யார் பங்கேற்பு
விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீவிர கண்காணிப்பு
மோடியின் ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரை 2000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.குமரி கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.