இடைத்தேர்தலுக்கு பிறகு இருக்கு கச்சேரி.. அழகிரி அணி சேர்ப்பால் பரபரப்பில் திமுக!
இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவில் பரபரப்புகளுக்குப் பஞ்சமிருக்காது என்கிறது அறிவாலயம் வட்டாரம்.
சென்னை: இடைத்தேர்தல் முடியட்டும், அதன்பிறகு நல்லது நடக்கும் என அழகிரிக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார் கருணாநிதி என்று தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றிய நிலையில் அவரை சந்தித்துத்துப் பேசும் வாய்ப்பு அழகிரிக்கு கிடைத்தது. உடல்நலத்தை மையமாக வைத்து 3 முறை கலைஞரை சந்தித்த அழகிரி, வெளிநாடு சென்றுவிட்டு 10ம் தேதி தமிழகம் திரும்பியவர் மீண்டும் கருணாநிதியை சந்தித்தார்.
தற்போது உடல்நலம் தேறியுள்ள கருணாநிதியிடம் இந்த சந்திப்பின் போது அழகிரி கொஞ்சம் அரசியல் பேசியிருக்கிறார் என்கிறார்கள் கோபாலபுரத்தினர்.
கட்சியில் இணைப்பு
குறிப்பாக, கட்சியில் மீண்டும் தன்னை கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும், தனது மகன் தயாநிதியை திமுக அறக்கட்டளையின் உறுப்பினராக்க வேண்டும் என்பதை அழுத்தமாக சொன்னார் அழகிரி. "இதையே ஏன் திரும்பத் திரும்ப சொல்கிறாய்? எதை எப்போது செய்யணும் என்பது எனக்கு தெரியும். இடைத்தேர்தல் முடியட்டும் . நம்பிக்கையோடு இரு" என்று சொல்லியிருக்கிறார் கருணாநிதி.
எல்லாம் எனக்கு தெரியும்
சந்திப்பின்போது உடனிருந்த, செல்வி, அப்போது அழகிரி அண்ணனுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். அதற்கு கருணாநிதி, "என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும் . என்னை மீறி எதுவும் நடந்துவிடாது. பொறுமையாக இருங்கள்" என சொன்னாராம், என்று கிசுகிசுக்கின்றனர்.
ஸ்டாலின் வீட்டில் கொந்தளிப்பு
இதற்கிடையே, மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் திரள்வதால், ஸ்டாலினின் இல்லத்திற்குள் திடீர் கொந்தளிப்பாம். அழகிரிக்காக கட்சியிலோ அறக்கட்டளையிலோ ஏதேனும் மாறுதல் நடந்தால், எந்தெந்த பொறுப்புகளில் உதயநிதி இருக்கிறாரோ அதிலிருந்து அவர் விலகிவிடுவார் என்கிற ஆவேசம் ஸ்டாலின் வீட்டுக்குள் எதிரொலிக்கவே செய்கிறதாம்.
திமுக பரபரப்பு
அதனால் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவில் பரபரப்புகளுக்குப் பஞ்சமிருக்காது என்கிறது அறிவாலயம் வட்டாரம். கனிமொழி யார் பக்கம் என்ற கேள்வியும் அப்போது எழும் என தெரிகிறது. அவரை இப்பிரச்சினைகளுக்கு துருப்பு சீட்டாக பயன்படுத்த அழகிரி திட்டமிட்டுள்ளதாகவும், அதையே ஸ்டாலினும் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.