10 பவுன் நகைக்காக நின்று போன கல்யாணம்- மணமகன் மீது மணமகள் குடும்பத்தார் புகார்
சென்னை: சென்னை திருவான்மியூரில் 10 பவுன் நகைக்காக திருமணமமே நின்று போன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து மணமகள் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் செய்தனர்.
சென்னை அடையாறு திருவேங்கடம் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவர் ஒரு மெக்கானிக். இவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் முகையூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இருவருக்கும் திருவான்மியூரில் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நடந்தது.
அப்போது மாப்பிள்ளை செல்வம், அவருடைய உறவினர்கள் மணமகளின் தந்தையிடம் திருமணத்தின் போது 23 பவுன் நகை தருவதாக கூறினீர்கள், ஆனால் நகை குறைவாக உள்ளதே என கேட்டனர். அப்போது மணமகளின் தந்தை, இப்போது 13 பவுன் நகை போட்டுள்ளோம். 10 பவுன் நகையை மறுவீட்டிற்கு வரும் போது தருவோம் என்றார்.
மீதமுள்ள 10 பவுன் நகையை இப்போதே தராவிட்டால் திருமணம் நடக்காது என மணமகன் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மணமகன் உறவினர்கள் மணமகளின் தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் திருமணம் நின்றது.
இதனால் மணமகள் குடும்பத்தினர் திருவான்மியூர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். மேலும் நடந்த சம்பவம் குறித்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் ரியாசுதீன் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.