ஜல்லிக்கட்டு மீதான தடையை கண்டித்து நாளை சென்னை சாஸ்திரிபவன் முற்றுகை: மே 17 இயக்கம்
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையைக் கண்டித்து நாளை சென்னையில் மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜல்லிக்கட்டின் மீதான தடையையும், தேசிய இன பண்பாட்டின் மீதான அடக்குமுறையையும் அம்பலப்படுத்தியும் நாளை மாலை 4 மணியளவில் சென்னை சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.

இந்தியாவிடம் அடிமைப்பட்டு கிடக்கும் தேசிய இனங்களுக்கு கிடைக்கும் அவமானமே இது போன்ற நீதிமன்றத் தீர்ப்புகள். ஆகமவிதிகள் பண்பாடாகவும், பாரம்பரியமாகவும் தெரிகிற கண்களுக்கு எளிய மக்களின் பண்பாடுகள் உறுத்தவே செய்யும்.
பிராணி வதை என்றும், விபத்துச் சாவுகள் என்றும் பசப்பி தனது வன்மத்தினையும், வக்கிரத்தினையும், அடக்குமுறையையும் நம்மீது திணித்து நியாயப்படுத்துகிறது.
பாபர் மசூதி உடைப்புக்குக் கொடுத்த தீர்ப்பினை நாம் இன்னும் மறக்கவில்லை. ஒரு தேசிய இனத்தின அடையாளங்களை ஒடுக்கி அடக்கிவிடமுடியாது.
தமிழ்த்தேசிய இனமக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக சனநாயகக் குரலை வலிமையாக பதிவு செய்வோம். நாட்டு மாடுகளின் அழிவிற்கும் பன்னாட்டு நிறுவனங்களில் லாபத்திற்கும் செய்யப்படும் இந்த அநீதியை கண்டிப்போம்.
நாளைய முற்றுகைப் போராட்டத்தில் பங்கெடுக்க அனைவரையும் அழைக்கிறோம்.
இவ்வாறு திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications