உடைந்தது மக்கள் நல கூட்டணி! வெளியேறியது மதிமுக - வைகோ திடீர் அறிவிப்பு!!
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக வைகோ அறிவித்துள்ளார்.
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை இணைந்து முதலில் மக்கள் நலக் கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தலின் போது இந்த கூட்டியக்கம் மக்கள் நலக் கூட்டணியாக உருவெடுத்தது.
இக்கூட்டணியுடன் தேமுதிக, தமாகா ஆகியவையும் கை கோர்த்தன. ஆனால் தேர்தலில் இந்த அணி படுதோல்வியைச் சந்தித்தது.
இதன் பின்னர் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தனித்தனியே நிலைப்பாட்டை மேற்கொள்ள தொடங்கின. இதனால் மக்கள் நலக் கூட்டணியின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் சென்னையில் இன்று மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மதிமுக அறிவித்துள்ளது. சென்னையில் மதிமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் அண்ணாநகரில் எனது இல்லத்தில் நடைபெற்றது. உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் அனைவருமே கலந்து கொண்டனர். நீண்டநேரம் கருத்துகள் பரிமாறப்பட்டன. மக்கள் நலக் கூட்டு இயக்கத்தில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது
சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தோழமையும் நட்பும் தொடரும். இதற்கு அடையாளமாக 30-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள நல்லகண்ணு பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் நூல்கள் வெளியிடப்படுகின்றனர்.
எழுத்தாளர் ஜீவபாரதி எழுதிய நல்லகண்ணு பற்றிய நூலை நான் வெளியிடுகிறேன். அந்நிகழ்ச்சியில் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் பங்கேற்கிறோம்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததாலும் காவிரியில் தண்ணீர் விடாமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்ததாலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஈரோடு வட்டாரத்திலும் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மொத்தம் 45 விவசாயிகள் தற்கொலை செய்து மடிந்துள்ளனர். தமிழகம் முழுவதும் விவசாயம் பொய்த்துபோய்விட்டது. ஆகையால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி ஜனவரி 6-ந் தேதி மதுரையில் எனது தலைமையில் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு வைகோ கூறினார்,