3 மாணவிகள் தற்கொலை வழக்கு... கல்லூரி தாளாளர் வாசுகிக்கு மருத்துவ பரிசோதனை
சென்னை: விழுப்புரம் அருகே 3 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அக்கல்லூரி தாளாளர் வாசுகி உட்பட 4 பேருக்கும் இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. இந்தக் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த மாணவிகள் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகியோர் கடந்த 23-ஆம் தேதி கல்லூரியின் அருகே உள்ள ஒரு கிணற்றில் தண்ணீரில் மூழ்கி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

மாணவிகளின் மரணத்தைத் தொடர்ந்து, அக்கல்லூரி தொடர்பாக அதிர்ச்சி தரும் விஷயங்கள் அம்பலமாகி வருகின்றன. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அக்கல்லூரி தாளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளை அரசு கல்லூரிக்கு மாற்றம் செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
மாணவிகள் மரணம் தொடர்பாக கல்லூரி தாளாளர் வாசுகி, அவரது மகன் சுவாக்கர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி, அரசியல் பிரமுகர் பெரு.வெங்கடேசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் சுவாக்கர் வர்மா, கலாநிதி இருவரும் கைது செய்யப்பட்டனர். மற்ற இருவரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அதனைத் தொடர்ந்து 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், அவர்கள் 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். அதனைத் தொடர்ந்து வாசுகியை 6 நாட்களும், மற்றவர்களை 5 நாட்களும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கிடைத்தது.
அவர்களை விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். நேற்று இரவு 10 மணி வரை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்தது. சி.ஐ.டி. போலீஸ் நாகஜோதி, கூடுதல் சூப்பிரண்டு ஸ்டீபன் ஏசுபாதம், இன்ஸ்பெக்டர் பால்ராஜ், வசந்தாமணி, ஹேமமாலினி மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் விசாரணை நடத்தினார்கள்.
இன்று காலை வாசுகியிடம் 3-வது நாளாகவும், மற்றவர்களிடம் 2-வது நாளாகவும் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்காக விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் இந்துமதி வரவழைக்கப்பட்டார். அவர் 4 பேரையும் பரிசோதித்து விட்டு, அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து மீண்டும் விசாரணை தொடங்கியது.
நேற்று முன்தினம் இரவு வாசுகியின் வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி வந்தனர். அதில் உள்ள விவரங்கள் குறித்து வாசுகியிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், வாசுகி பயன்படுத்திய டைரி ஒன்றில் பல்வேறு அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்று இருந்ததாகவும், அதில் பணம் கொடுக்கப்பட்டிருந்த விவரங்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications