அறநிலையத்துறைக்கு எதிராக மக்கள் கொதிப்பு.. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், உண்ணாவிரதம், போராட்டம்
Recommended Video
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் முன்பாக மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கடைகள் எரிந்து நாசமாகின. ஆக்கிரமிப்புகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்த அரசு நிர்வாகம், இந்து அறநிலையத்துறை போன்றவைதான் இந்த தீ விபத்திற்கு காரணம் என்ற கோபத்தில் மக்கள் உள்ளனர்.
குறிப்பாக மதுரை மக்கள் மீனாட்சி அம்மன் கோயிலுடன் மிகவும் உணர்வுபூர்வ தொடர்பு உள்ளவர்கள். மீனாட்சி அம்மன் கோயிலை தங்களின் தாய் வீடு போல அவர்கள் உணர்வார்கள். அந்த கோயிலில் நிர்வாக சீர்கேட்டால் இப்படி ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளதை மதுரை மக்களால் ஜீரணிக்க முடியவில்லை.
இதையடுத்து மக்கள் மத்தியில் அரசு மற்றும் அரசு அதிகாரிகள் மீது கோபம் ஏற்பட்டுள்ளது.காலை முதலே மக்கள் கோயில் முன்பாக குவிந்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தீ விபத்து ஏற்படாமல் தடுக்க தவறிய நிர்வாகத்தை கண்டித்து மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு கோபுரம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் சில மக்கள் இறங்கியுள்ளனர். பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கோயில் முன்பாக நின்று ஆர்ப்பாட்டம் நடத்தியபடி உள்ளனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்து கோயில்கள் பராமரிப்பின்றி இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.