தாய்மையடைந்தால் தப்பா... அயய்யோ... எங்க இருந்தும்மா கிளம்பி வர்றீங்க நீங்கள்லாம்?
சென்னை: தப்பித் தவறிக் கூட ஏதாவது சீரியலைப் பார்த்து விடக் கூடாது என பயந்து கொண்டே தான் சேனலை மாற்ற வேண்டியதாய் இருக்கிறது. காரணம் அந்தளவுக்கு மிகவும் "நல்ல" கருத்துக்களை மக்களுக்கு கற்றுத் தருகின்றன சீரியல்கள்.
கடவுளும் பெண்மையை மதித்துத் தான் கருவறையை அவளது உடலுக்குள் வைத்தான், தாய் நடமாடும் தெய்வம் என பூமியைக் கூட தாய் என ஒருபுறம் பாராட்டிக் கொண்டிருக்க, தாய்மை என்பது செய்யக்கூடாத மிகப்பெரிய குற்றம் என்பது போல சில சீரியல்களில் காட்டப்படுவது வேதனை தருவதாக அமைந்துள்ளது.
மாமியார் என்றாலே வில்லி தான் என்றில்லாமல், மருமகளை, ‘மறு'மகளாகவே பாவிக்கும் மாமியார் என வித்தியாசமான கதைக்களத்தோடு களமிறங்கிய பிரியமானவளே சீரியலில் தான் இந்தக் கூத்து.
கர்ப்பம்...
இந்த சீரியலில் நாயகி அவந்திகா கர்ப்பமானதாக சில நாட்களுக்கு முன்னர் காட்டப்பட்டது. இந்த அவந்திகா இருக்காங்களே.. அவங்களைப் பற்றி தனியாக ஒரு "100 பக்க மல்ட்டி ஸ்டோரி"யே போடலாம். அப்படி ஒரு "அராத்து" கேக்டர் அவர். ஏற்கனவே, விபத்து நடந்த இடத்தில் காயமடைந்தவர்களைக் காப்பாற்றாமல் செல்பி எடுக்கும் பெண் அவர்.
குண்டாகிட்டியே...
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் அவந்திகா, வழியில் தனது தோழி ஒருவரைச் சந்திக்கிறார். அப்போது தோழி, ‘ஏன் இப்படி குண்டாகி விட்டாய்?' என சூடேற்றுகிறார்.
அசிங்கமாகிடுவ...
அதோடு, தாய்மை அடைந்து குழந்தைகள் பெற்றால் இன்னும் அசிங்கமாகி விடுவாய் எனக் கூறுகிறார். தான் இன்னமும் ஜாலியாக சுற்றிக் கொண்டிருப்பதாகவும், ஆண்கள் தன்னைப் பார்த்து ஜொள்ளு விடுவதாகவும் (?) பெருமை பீற்றிக் கொள்கிறார்.
குழப்பம்...
இதனால், அவந்திகா சற்று குழம்பிப் போகிறார். தற்போது இந்தக் கர்ப்பம் தனக்குத் தேவையா என அவர் யோசிக்க ஆரம்பிக்கிறார். அந்தக் குழப்பத்துடனேயே வீட்டுக்குப் போகிறார்.
அவரையும் தாண்டி...
இன்னொரு நாள் மாமியார் வேண்டாம் என்று கூறக் கூற கேட்காமல் வாக்கிங் ஜாகிங் என கிளம்புகிறார். அப்போது வழியில் வேறொரு தோழியைச் சந்திக்கிறார் அவந்திகா. இவர் பழைய தோழியைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு நாயகிக்கு பீதியைக் கிளப்புகிறார்.
அவ்வளவு தான்...
தாய்மை அடைந்தால் அழகு போய்விடும், தன்னம்பிக்கை போய்விடும், எல்லாமே நாசமாகப் போய் விடும் என அடுக்குகிறார். இதனால், குழந்தைப் பேறைத் தள்ளிப் போடலாம் என நாயகிக்கு அவர் அறிவுரை கூறுகிறார்.
அட டிவியிலும் அதே அக்கப்போர்
இந்தக் குழப்பத்துடன் வீட்டுக்கு வரும் அவருக்கு வீட்டினரின் டோஸ் கிடைக்கிறது. வாங்கி முடித்துக் கொண்டு டிவி பார்க்க உட்காருகிறார். அட டிவியிலும் மாமியார் ஒருவர் மருமகளின் கர்ப்பத்தைக் கலைக்க உத்தரவிடுவது போல காட்சி.
பப்பாளி எடு சாப்பிடு
அதில் பப்பாளி சாப்பிட்டால் கர்ப்பம் கலையும் என அவர் கூறியதைப் பிடித்துக் கொண்ட அவந்திகா, கிச்சனில் இருந்த பப்பாளியை எடுத்து ஜூஸ் போடுகிறார். அத்தோடு நேற்றைய எபிசோட் ஓவர்!
அழகு அரோகரா...
சீரியல் இயக்குநர்கள் இத்தகைய வசனங்கள் சமுதாயத்திற்கு மிகவும் அவசியமா என யோசிக்க வேண்டும். சரிவர மெச்சூரிட்டி இல்லாத இளம்பெண்கள் மத்தியில் கர்ப்பத்தால் உங்கள் அழகு அரோகரா என்ற பீதியை ஏற்படுத்துவதால் உங்களுக்கு என்ன லாபம் கிடைத்து விடப் போகிறது.
தாய்ப்பால் பிரச்சாரம்...
ஏற்கனவே, அழகு கெட்டுவிடும் என தாய்ப்பால் தர மறுக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதம் தாய்ப்பாலை விட எதிர்ப்புச் சக்தி மிகுந்த உணவு வேறெதுவும் இல்லை என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
தாய்மையின் மகத்துவம்...
இனி வரும் காலத்தில், இதேபோல் தாய்மை அடைவதன் மகத்துவத்தைப் பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் எடுத்துக் கூற வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப் பட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன இத்தகைய சீரியல்கள்.
நடிகைகளின் வாழ்க்கை...
குழந்தைப் பெறுவதால் மட்டும் ஒரு பெண்ணின் அழகு போய் விடுமா? குழந்தைப் பெற்றபின் மீண்டும் சினிமாவில் நடித்து புகழ் பெற்ற நடிகைகள் இல்லையா? சினிமா மட்டுமின்றி தொழில் துறையிலும் வெற்றி பெற்ற அம்மாக்கள் அதிகம்.