டாமின் மூலம் தாது மணல் விற்பனை: நிதித்துறை செயலர் சண்முகம் ஐ.ஏ.எஸ்
சென்னை: ஒட்டுமொத்த மாநில வளர்ச்சி விகிதத்தில் தமிழகத்தின் கடன் அளவு 18.43% ஆக உள்ளது என்று சென்னையில் தமிழக நிதித்துறைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் கூறியுள்ளார். நிதிபற்றாக்குறையை கடன் வாங்குவதன் மூலம் சரி செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக அவர் தெரிவித்தார். டாமின் மூலம் தாதுமணல் விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழக பட்ஜெட் குறித்து, நிதித்துறை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஒட்டுமொத்த மாநில வளர்ச்சி விகிதத்தில் தமிழகத்தின் கடன் அளவு 18.43 சதவீதம். தமிழக பட்ஜெட்டில் புதிதாக 5 திட்டங்கள் உள்ளன. நிதிப்பற்றாக்குறையை கடன் வாங்குவதன் மூலம் சரி செய்ய திட்டம் உள்ளது. டாமின் மூலம் தாது மணல் விற்பனை செய்யும் திட்டம் உள்ளது.
ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீட்டில் சமூக நலத்திட்டங்களுக்கு 35 சதவீதம். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் மானியம் ரூ.68,111 கோடி. நிதிப்பற்றாக்குறை வரையறுக்கப்பட்ட 3 சதவீதத்திற்கு கீழ் 2.96 சதவீதமாக தான் உள்ளது.தமிழகத்தில் தற்போது வாட் வரி உயர்வில்லை. மற்ற மாநிலங்களில் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
சில துறைகளில் மந்த நிலை ஏற்பட்டதால் வரி வருவாய் குறைந்தது.பொருளாதார மந்த நிலை காரணமாக தமிழக வருவாய் குறைந்துள்ளது. வாட் வரியை சீரமைக்காததால், பெட்ரோலிய பொருட்களின் மூலம் வரும் வருவாயில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
விவசாய கடன் ரத்து, இலவச மின்சாரத்தால் அரசின் செலவினம் அதிகரித்துள்ளது. தமிழக அரசுக்கு ரூ.15,854 கோடி வருவாய் பற்றாக்குறையும், ரூ.40,533 கோடி நிதிபற்றாக்குறையும் உள்ளது. நடப்பு நிதியாண்டில் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் மானியங்கள் ரூ.24,741 கோடி என மதிப்பீடப்பட்டுள்ளது. மத்திய அரசின் வரியில் மாநில அரசின் பங்குத்தொகை ரூ.23,018 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.
ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீட்டில் சமூகநலத் திட்டங்களுக்கு 35% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார மந்தநிலை காரணமாகவே தமிழகத்தின் நிதிவருவாய் குறைந்துள்ளது என்று நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். வாட் வரியை மறுசீரமைக்காததால் பெட்ரோலியப் பொருட்களின் மூலம் வரும் வருவாயயில் தேக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலின் போது அதிமுக தேர்தல் அறிக்கையில், தாது மணல் எடுப்பது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அரசே தாது மணல் எடுத்து விற்பனை செய்யும்.
சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டியெடுத்தது தொடர்பான வழக்குகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அரசுக்கு ஏற்பட்ட இழப்பு வசூலிக்கப்படும். புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும் என்று கூறப்பட்டது. இது பற்றி பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் நிதித்துறை செயலர் சண்முகம், தாதுமணல் விற்பனை பற்றி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.