விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி துடித்த மாணவன்.. காரை விட்டு இறங்கி ஓடி வந்து உதவிய அமைச்சர்!
திருப்பத்தூர் : வாணியம்பாடி அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு.
ஜோலார்பேட்டை பகுதியில் மக்கள் சிறப்பு குறைகேட்பு முகாமை முடித்துவிட்டு அமைச்சர் எ.வ.வேலு வரும் வழியில் விபத்தில் சிக்கி இளைஞர் உயிருக்குப் போராடும் காட்சியைப் பார்த்துள்ளார்.
உடனடியாக காரை விட்டு இறங்கி, 108 ஆம்புலன்ஸில் விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பியபிறகே அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

விபத்து
வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இஸ்மாயில், அஜ்மல் ஆகியோர் ஏலகிரிக்கு சுற்றுலா சென்றபோது வேப்பம்பட்டு அருகே எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

ஒரு மாணவர் பலி
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.சம்பவ இடத்திலேயே இஸ்மாயில் (21) என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவர் அஜ்மல் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினார். அப்போது அந்த வழியாக திமுக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் காரில் வந்துகொண்டிருந்தனர்.

அமைச்சரின் கார்
திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்த நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடியாக காரை நிறுத்தி விபத்தில் படுகாயமடைந்த அஜ்மலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

உதவிய அமைச்சர்
இந்த விபத்து குறித்து வாணியம்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் சிறப்பு குறைகேட்பு முகாமை முடித்துவிட்டு வரும் வழியில் அமைச்சர் எ.வ.வேலு விபத்தில் சிக்கியவர்களை கண்டவுடன் காரை விட்டு இறங்கி 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பொறுப்புடன் செயல்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications