விரைவில் "மூன்றாம் பிறை" கமல்ஹாசனைப் பார்க்கலாம்.. ஜெயக்குமார் நக்கல்!
நடிகர் கமல்ஹாசன் விரைவில் மூன்றாம் பிறை படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் கமல் போல ஆகிவிடுவார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
காஞ்சிபுரம் : நடிகர் கமல்ஹாசன் இப்படியே பேசிக்கொண்டு போனால் விரைவில் மூன்றாம் பிறை படத்தில் இறுதிக் காட்சியில் வரும் கமல்ஹாசனைப் போல ஆகிவிடுவார் என்று நிதிஅமைச்சர் ஜெயக்குமார் கேலி செய்துள்ளார்.
தமிழக அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர்கள், கமல்ஹாசனுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது, அவர் அரசியலுக்கு வந்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று விமர்சனம் செய்தார்.
கமல்ஹாசனை தி.மு.க தூண்டி விடுகிறது என்றும் தி.மு.க நடத்திய ஊழல்களை அவர் ஏன் தட்டி கேட்கவில்லை எனவும் அமைச்சர்கள் குற்றம்சாட்டினர்.
அமைச்சர்களுக்கு இமெயில்
இந்நிலையில் கமல்ஹாசன் விஸ்வரூபம் எடுத்து, அரசு நிர்வாகத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அந்தந்த துறை அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு பரபரப்பு வேண்டுகோள் விடுத்தார். பின்னர் அமைச்சர்களுடைய இணையதள முகவரிகள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டன.
கமல் ட்வீட்
கமல்ஹாசன் அரசுக்கு எதிராக தினமும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிடுவதும், அதற்கு அமைச்சர்கள் பதில் அளிப்பதும் தொடர்ந்து வருகிறது. கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வேன் என டுவிட்டரில் நேற்று முன்தினம் நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பதிலடி கொடுத்திருந்தார்.
தானாக கலையும்
கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் நிலை குறித்து பரபரப்பான கருத்துகளை கூறி வருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இந்த ஆட்சியை நான் எதுவும் செய்யத் தேவையில்லை, அவர்கள் செய்வதே ஆட்சியை கலைத்து விடும் என்று கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகின.
கவிழ்க்க முடியாது
இதனிடையே காஞ்சிபுரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் நிதியமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எத்தனை கமல்ஹாசன், எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுக அரசை கவிழ்க்க முடியாது.
மூன்றாம் பிறை கமல்
நடிகர் கமல்ஹாசன் இப்படியே பேசிக்கொண்டிருப்பது நல்லதல்ல. அவர் இப்படியே பேசிக்கொண்டு போனால் இறுதியில் அவர் நடித்த மூன்றாம் பிறை படத்தின் இறுதிக் கட்ட காட்சியில் வருகின்ற கமல்ஹாசனைப் போல ஆகிவிடுவார், என்று ஜெயக்குமார் கேலி செய்துள்ளார்.