இதென்ன புது கலாட்டா? கோஷ்டிகள் இணைப்பு குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்கிறோம்- ஜெயக்குமார்
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கவுள்ள நிலையில் அதிமுக இணைப்பு குறித்து தொண்டர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அமைச்சர் ஜெயகும
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கவுள்ள நிலையில் அதிமுக இணைப்பு குறித்து தொண்டர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
தினகரனின் மேல் உள்ள அதிருப்தி காரணமாக அதிமுகவின் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தைக்கு எடப்பாடி அணியினர் ஓகே சொன்னார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி 5-ஆக துண்டாடப்படும் நிலைக்கு சென்றது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இரு அணிகளும் இணைய உள்ளதாக தெரிவித்தனர். இருப்பினும் இரு அணியினரும் கௌரவ பிரச்சினை காரணமாக யார் முதலில் பேசுவது என்று தயக்கம் காட்டினர்.
பேச்சுவார்த்தைக்கு தயார்
பேச்சுவார்த்தைக்கு தயார் என்று இருதரப்பினரும் கூறி வந்தனர். எனினும் அவ்வப்போது எடப்பாடி அணியினர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தெரிவித்து வரும் கருத்துகளால் ஓபிஎஸ் அணியினர் கோபம் அடைந்தனர். அதிலும் சசிகலா, தினகரனை ஒதுக்க தயார் என்ற அமைச்சர் ஜெயகுமார் அறிவித்தார்.
ஓபிஎஸ் கருத்து
அதற்கு தர்மயுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்று ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்தியதால்தான் சசிகலா, தினகரனை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் ஜெயகுமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அது தவறு. அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்கு நாங்கள்தான் காரணம் என்றும் ஓபிஎஸ் தெரிவிப்பார் என்று நக்கலாக பதிலளித்தார்.
டென்ஷனான முனுசாமி
இதனால் ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் முனுசாமி தெரிவிக்கையில் மூன்றாம் தர அரசியல்வாதி போல் ஜெயகுமார் நடந்து கொள்கிறார் என்று பொங்கி எழுந்துவிட்டார். அதேபோல் தம்பிதுரையையும் பாரபட்சமில்லாமல் திட்டினார்.
அடக்கிவாசித்த எடப்பாடி
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி உத்தரவுபடி, அதிமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் வரை கட்சியினர் யாரும் கண்டபடி பேசவேண்டாம் என்பதால் வைத்திலிங்கமும், ஜெயகுமார் தெரியாமல் பேசிவிட்டார் என்று சப்பைக் கட்டு கட்டினார்.
பேச்சுவார்த்தை இல்லை
ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர்கள் யாரும் அதிமுக இணைப்புக்கு பச்சைக் கொடி காட்டாத நிலையாலும், சசிகலா, தினகரனை கட்சியை விட்டுஅகற்றாததாலும் அதிமுக இணைப்பு சரிப்பட்டு வராது என்று ஓபிஎஸ் அறிவிக்கவுள்ளார். இந்த நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து கட்சித் தலைமை கழகத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார், அதிமுக இணைப்பு குறித்து தங்கள் கருத்துகளை தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார். அதிமுக இணைப்பு குறித்து ஆரம்பத்திலிருந்து இரு தரப்பினர் முரண்பட்ட கருத்துகளையே கூறி வரும் நிலையில் ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடு, ஜெயகுமாரின் கருத்தால் தமிழக மக்கள் குழம்பியுள்ளனர்.