பிஏவுக்கு கார் கேட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி... மறுத்த நிர்வாக இயக்குநர்- கோட்டையில் பஞ்சாயத்து!
பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜிக்கும், பால்வளத்துறை நிர்வாக இயக்குநருக்கும் பி.ஏ.வுக்கு கார் ஒதுக்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை: தமிழக அரசின் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கும் பால்வளத்துறை நிர்வாக இயக்குநர் சுனில்பாலிவால் ஐ.ஏ.எஸ்சுக்கும் நடந்துள்ள முட்டல் மோதல் விவகாரம் தலைமைச் செயலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர்களுக்கு அரசே வாகனங்களை ஒதுக்கித்தந்துவிடும். அவர்களின் பி.ஏ.க்களுக்கு அந்தந்த துறையின் மூலமாக வாகனம் ஒதுக்கீடு செய்வது நடைமுறை. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சுனில்பாலிவாலை தொடர்புகொண்ட அமைச்சர், தனது சீனியர் பி.ஏ.வுக்கு ஒரு கார் ஒதுக்கீடு செய்யுங்கள் என அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.
ஆனால், சுனில்பாலிவால் இதனை ஏற்க மறுத்துள்ளார். உடனே அமைச்சர், உங்களுக்கு மட்டும் 5 கார்களை ஒதுக்கிக்கொண்டீர்களே,
அது எப்படி? இதில் 4 கார்கள் உங்கள் வீட்டிற்காக ஓடுகிறது என சொல்ல, எனக்கு 5 பொறுப்புகள் கொடுத்துள்ளது அரசு. அதனால் 5 கார்கள்.
இதை எப்படி நீங்கள் கேள்வி கேட்க முடியும்? என்கிற ரீதியில் பேசியிருக்கிறார் சுனில். இதனால் கோபமடைந்த அமைச்சர், அரசாங்கத்தில் 32 துறைகள் இருக்கு. எல்லாத்துக்கும் தலைவர் தலைமைச்செயலாளர் தான். அதுக்காக அவருக்கு 32 கார்களா ஒதுக்கப்பட்டிருக்கிறது ? என ஆரம்பித்து கட்டமாகியிருக்கிறார்.
இதனால் இருவருக்குமிடையே வார்த்தைகள் தடித்ததாக பால் வளத்துறையினர் கூறுகின்றனர். தற்போது இந்த பஞ்சாயத்து தலைமைச்செயலாளர் ராமமோகனராவிடம் போயிருக்கிறதாம்.