அரசு இணையதளத்தில் இருந்து அமைச்சர்கள் முகவரி, போன் எண்கள் நீக்கப்பட்டது ஏன்? ஹைகோர்ட் கேள்வி
தமிழக அரசு இணையதளத்தில் இருந்து அமைச்சர்கள் முகவரி, தொலைப்பேசி எண்கள் நீக்கப்பட்டது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: தமிழக அரசு இணையதளத்தில் இருந்து அமைச்சர்கள் முகவரி, தொலைப்பேசி எண்கள் நீக்கப்பட்டது ஏன் எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நடிகர் கமல் ஹாசன், தமிழக அரசின் ஊழல் குறித்து தொடர்ந்து எதிர்த்துப் பேசி வருகிறார். அந்த வகையில் ஊழல் புகார்கள் அமைச்சர்களின் தொடர்பு முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக மக்களை கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் இணைய தளத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரிகள், தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி என அனைத்தும் ஜூலை 22ம் தேதி மாயமானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திமுக எம்எல்ஏ தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், அமைச்சர்களின் தொடர்பு எண்கள் நீக்கப்பட்டது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அரசின் இந்தச் செயல் வெளிப்படையான நிர்வாகத்துக்கு எதிரானது என்றும் தியாகராஜன் எம்எல்ஏ மனுதாக்கல் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு இணையதளத்தில் இருந்து அமைச்சர்கள் முகவரி, தொலைப்பேசி எண்கள் நீக்கப்பட்டது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் அமைச்சர்களின் தொடர்பு எண் நீக்கப்பட்டது பற்றி ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது.