சபாநாயகர் தனபாலை தக்க வைக்க எடப்பாடி தரப்பு பகீரத பிரயத்தனம்!
சென்னை: தினகரன் தரப்பு முதல்வராக முன்னிறுத்தும் சபாநாயகர் தனபாலுடன் அமைச்சர் ஜெயக்குமார் தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை நீக்கிவிட்டு தலித் சமூகத்தைச் சேர்ந்த சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்கிறது தினகரன் தரப்பு. சசிகலாவின் தம்பி திவாகரன் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் இதையே வலியுறுத்தி வருகிறார்.
30 எம்.எல்.ஏக்களுக்கு குறி
சபாநாயகர் தனபாலை முதல்வராக்கினால் தலித் எம்.எல்.ஏக்கள் 30 பேரின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்பது தினகரன் தரப்பின் கணக்கு. இதனிடையே அதிருப்தி அமைச்சர்கள், தினகரனின் ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள் ஆகியோரை சமாதானப்படுத்துவதில் முதல்வர் எடப்பாடியார் தரப்பு படுதீவிரமாக உள்ளது.
தனபாலுடன் ஜெயக்குமார் சந்திப்பு
இதன் ஒரு பகுதியாக சபாநாயகர் தனபாலை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தலைமை செயலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது சபாநாயகர் தனபாலை சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிருப்தி அமைச்சர்கள்
அமைச்சரவை மாற்றத்தின் போது துறைகள் பறிக்கப்பட்டதால் உடுமலை ராதாகிருஷ்ணன், கடலூர் சம்பத் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களையும் எடப்பாடியார் தரப்பு சமாதானப்படுத்துவதில் மும்முரமாக உள்ளது.
ஸ்லீப்பர் செல்கள்
ஸ்லீப்பர் செல்களாக உள்ள 5 அமைச்சர்களை எப்படி கையாள்வது என்பது தொடர்பாக எடப்பாடியார் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள் வசம் தலா 5 அமைச்சர்கள் இருப்பதாக கூறப்படுவதால் இவர்களை நிதானமாக கையாள எடப்பாடியார் தரப்பு முடிவு செய்துள்ளது.