மியாட் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் சாகவில்லை: அரசு விளக்கம்
சென்னை: ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மியாட் மருத்துவமனையில் நோயாளிகள் இறக்கவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மியாட் மருத்துவமனையில், மின்சாரம் இன்றியும், மழையால் ஜெனரேட்டர் பழுதானதாலும் ஆக்சிஜன் கிடைக்காமல், ஐசியூவில் இருந்த 18 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன், தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி: மியாட் மருத்துவமனை மிகவும் பெரியது. அங்கு 1000 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும். வெள்ளம் வந்தபோது, பெரும்பாலான நோயாளிகள் கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டனர்.
எனவே, ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் யாரும் சாகவில்லை. சிகிச்சையின்போது பலன் கிடைக்காமல் இறந்த நோயாளிகளின் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 18 உடல்களை பிரேத பரிசோதனை அறையில் பார்த்ததும், தப்பான தகவல் பரப்பப்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனையில் வெள்ளம் புகாமல் இருந்திருந்தால், அரசு மருத்துவமனைக்கு சடலங்கள் அனுப்பப்பட்டிருக்காது. அப்போது இப்படி பரபரப்பாக கூறப்பட்டிருக்காது.
வெள்ளம் புகுந்தபோது, மியாட் மருத்துவமனைக்கு அமைச்சர் சென்றிருந்தார். நானும் அவரோது பார்வையிட சென்றிருந்தேன். இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் சிலர் கூறுகையில், மியாட் மருத்துவமனையில், ஒரு எமர்ஜென்சி லைட் கூட இல்லை. பணத்தை பறிப்பதில்தான் குறியாக இருந்தனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, மருத்துவமனை பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.