வெள்ளத்தில் தவிக்கும் தூத்துக்குடி மக்கள்: போரட தயாராகும் மக்கள் நலக்கூட்டணி
சென்னை: தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி, மக்கள் நலக்கூட்டணியின் சார்பில், நாளை காலை 11 மணி அளவில் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு எதிரே அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த பல ஆண்டுகளாக கண்டிராத பெருமழையும், பெருவெள்ளமும் தூத்துக்குடி மாவட்டத்தை பெரும் அளவில் பாதித்துள்ளது. குளங்கள் உடைந்துள்ளன.
ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சேதமுற்றுள்ளன. உப்பளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் வெள்ளம் பாய்ந்து பயிர்கள் பாழாகியுள்ளன.
ஆடு, மாடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சாலைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி, மக்கள் நலக்கூட்டணியின் சார்பில், நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி அளவில் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு எதிரே அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும், மாவட்டச் செயலாளர் ஜோயலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் அர்ஜூனனும், சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரையும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணும், மாவட்டச் செயலாளர் அழகுமுத்துப்பாண்டியனும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யலுசாமியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் துணைப் பொதுச்செயலாளர் கலைவேந்தனும், மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொள்வார்கள் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.