காவிரி ஆற்றில் உழுது போராட்டம் நடத்திய மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் - விவசாயிகளும் பங்கேற்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி ஆற்றில் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் மாடுகளை கொண்டு உழுது போராட்டம் நடத்தினர்.
தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மக்கள் நீதிமய்யத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் காவிரியாற்றில் இறங்கி போராட்டம் மேற்கொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் சாலை, ரயில் மறியல்கள், உண்ணாவிரதம், கடையடைப்பு என்று பலகட்ட எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுபோராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சிலர் உணர்ச்சிவசப்பட்டு, தீக்குளித்து தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
காவிரியாற்றில் இறங்கி போராடி வரும் இளைஞர்களுடன், விவசாயிகள் காளை மாடுகளுடன் சென்று ஆற்றில் உழுது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு மீட்பு குழுவினரும் ஏராளமானோர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களம் இறங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஜல்லிக்கட்டு போராட்டம் போல காவிரியை மீட்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.