பதன்கோட் தாக்குதல் எதிரொலி... கூடங்குளத்திற்கு "மொபைல்" ஏவுகணைகள் வருகை
நெல்லை: கூடங்குளம் மற்றும் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தை பாதுகாக்கும் வகையில் ராணுவத்தின் அதிநவீன மொபைல் ஏவுகணைகள் வந்துள்ளன.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இஸ்ரோவின் மகேந்திரகிரி திரவ இன்ஜின் ஆய்வு மையம் அமைந்துல்ளது. மேலும் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில கடந்த மாதம் 12- 13ம் தேதிகளில் இஸ்ரோ மைய பகுதிகளில் ஆள் இல்லாத சிறிய அளவிலான கிளைடர் விமானம் பறந்ததாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் எஸ்பி விக்ரமன் தலைமையில் அதிரடி படையினர் சோதனை நடத்தினர். சோதனையில் கிளைடர் விமானம் பறந்ததற்கான அறிகுறி தெரியவில்லை என தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் இலங்கை கடல் வழியே இஸ்ரோ மையம், கூடங்குளம் அணு மின் நிலையம், தூத்துக்குடி கடல் வழியாக ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறையினர் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்புத்துறை முடுக்கி விட்டுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையம், இஸ்ரோ மையத்தை பாதுகாக்கவும், ஒருவேளை தாக்குதல் நடந்தால் அவர்களை எதிர்கொள்ளவும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி இஸ்ரோ மையத்திற்கும், கூடங்குளம் அணு நிலையத்திற்கும் விமானப்படையின் அதிநவீன ரேடார் மொபைல் வாகனங்கள் மற்றும் அத்துமீறி பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை மொபைல் வாகனங்கள் உள்பட 7 வாகனங்கள் நெல்லை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்துள்ளன.
இவை விரைவில் சம்பந்தப்பட்ட இ்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.