திமுகவோடு சேர்த்து அதிமுக மீதும் மோடி சாடல்!: அன்புமணிக்காக கிருஷ்ணகிரியில் பிரச்சாரம்
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் மாறி மாறி அமையும் திமுக, அதிமுக அரசுகள் பரஸ்பரம் குறை கூறுவதிலேயே கவனம் செலுத்துகின்றன என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகாலம் நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியானது அதன் ஆட்சிக் கால அத்தனை ஊழல்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும். காங்கிரஸ் கட்சி வேலை வாய்ப்பு அளிப்போம் என்று உறுதி அளித்தது.
ஆனால் 10 ஆண்டுகாலத்தில் எத்தனை பேருக்கு காங்கிரஸ் கட்சி வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது? கொடுத்த வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தால் 70 கோடி இளைஞர்களின் கனவை நனவாக்கும் வகையில் வேலை வாய்ப்புகளை நிறைவேற்றுவோம் என்று உறுதி அளிக்கிறோம்.
மின்வெட்டுக்கு நிலக்கரி பற்றாக்குறைதான்...
குஜராத்தில் எனது ஆட்சிக் காலத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. அங்கு மின்வெட்டே கிடையாது. ஆனால் தமிழகத்தில் மின்வெட்டு இருக்கிறது.
இதற்கு காரணம் மத்திய அரசின் நிலக்கரிப் பற்றாக்குறை, ஊழல்தான் காரணம்... நீதிமன்றத்தில் மத்திய அரசு சொல்கிறது நிலக்கரித் துறை கோப்புகள் காணாமல் போய்விட்டது என்கிறது..
காணாமல் போனது நிலக்கரி துறை கோப்புகள் மட்டுமல்ல.. மக்களின் வாழ்க்கையும்தான்.. இப்படியே காங்கிரஸ் அரசு நீடித்தால் லாக்கரில்தான் நிலக்கரியைத் தேட வேண்டியது இருக்கும்.
உலகில் மிக நீளமான குடிநீர் திட்டம்
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அத்திட்டத்தையே கைவிட்டுவிட்டது.
உலகத்திலேயே மிக நீளமான குடிநீர் திட்டத்தை குஜராத்தில் செயல்படுத்துகிறோம். 9 ஆயிரம் கிராமங்களுக்கு பிரமாண்ட பைப் லைன் போட்டு குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.
திமுக- அதிமுக மீது சாடல்
தமிழக மீனவர்கள் பிரச்சனையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்ன செய்தது? எதையுமே செய்யவில்லை.
தமிழகத்தில் ஷிப்ட் முறை ஆட்சி போல ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திமுக- அதிமுக மாறி மாறி ஆட்சி அமைக்கின்றன. ஆனால் ஐந்து ஆண்டுகாலமும் மாறி மாறி பரஸ்பரம் குறை கூறுவதைத்தான் செய்கிறார்கள்..வேறு எதனையும் செய்வதில்லை.
இவ்வாறு மோடி பேசினார்.
இந்த கூட்டத்தில் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.