ஓகி புயல் ஓய்ந்த 19 நாட்களுக்குப் பிறகு குமரிக்கு வந்த மோடி- 90 நிமிடத்தில் ஆய்வு முடிந்ததாம்!
ஓகி புயலால் பாதிக்கப்பட்டோரை வரவழைத்து கன்னியாகுமரியில் இன்று பிரதமர் மோடி ஆறுதல் கூறுகிறார்.
சென்னை: ஓகி புயல் தாக்கி 19 நாட்கள் கடந்த நிலையில் இன்று கன்னியாகுமரிக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் எதனையும் பார்வையிடாமல் 90 நிமிடம் முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு பிரதமர் மோடி திரும்பியது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஓகி புயல் தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவுகளைத் தாக்கியது. சில மணிநேரங்களிலேயே கன்னியாகுமரியை ஓகி புயல் உருக்குலைத்தது.
இந்த ஓகி புயலில் சிக்கி மாயமான 600 மீனவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. இந்த நிலையில் ஓகி புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை தந்தார்.

மங்களூருவில் முகாம்
இதற்காக டெல்லியில் இருந்து இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி நேற்று மங்களூரு வருகை தந்தார். அங்கு அவருக்கு பாஜக தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.

திருவனந்தபுரத்தில் ஆய்வு
இதன்பின்னர் இன்று லட்சத் தீவு பகுதிகளை முதலில் பிரதமர் மோடி பார்வையிட்டார். அங்கிருந்து திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்.

எதனையும் பார்வையிடவில்லை
19 நாட்களாக கன்னியாகுமரியை பிரதமர் பார்வையிட வரவில்லை என்கிற கடும் அதிருப்தி இருந்தது. இதனிடையே கன்னியாகுமரிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, புயலால் பாதித்த எந்த ஒரு பகுதியையும் பார்வையிடவில்லை.

பிரதிநிதிகள் சந்திப்பு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் தெரிவித்த தகவல்களை மட்டும் கேட்டுக் கொண்டார் பிரதமர் மோடி. மேலும் விவசாயிகள், மீனவர்களின் பிரதிநிதிகள் என அழைத்துவரப்பட்டவர்களையும் பேச வைத்துவிட்டு ஆய்வு முடிந்ததாக பிரதமர் மோடி கிளம்பிவிட்டார். இது கன்னியாகுமரியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications