தலைமைச் செயலாளர் "ரேஞ்சிலிருந்து" டிரெய்னிங் சென்டர் இயக்குநராக சரிந்து போன சுங்கத்
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து மோகன் வர்கீஸ் சுங்கத் மாற்றப்பட்டு தமிழக அரசின் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையமான அண்ணா மேலாண்மைப் பயிற்சி மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்கள் இன்றைக்கும் ஆலோசகர்கள் என்ற பதவியில் தலைமைச் செயலாளர் ரேஞ்சுக்கு பதவியில் தொடருகின்றனர்.
ஆனால் தலைமைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அண்ணா ஐ.ஏ.எஸ் பயிற்சிமையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மோகன் வர்கீஸ் சுங்கத் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
42வது தலைமைச்செயலாளர்
தமிழகத்தின் 41-வது தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணனின் பதவிக்காலம் கடந்த 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழகத்தின் 42வது தலைமைச் செயலாளராக கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் பதவியேற்றார். விழிப்புணர்வு ஆணையர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த ஆணையராகவும் அவர் கூடுதலாக பதவிவகித்தார்.
மோகன் வர்கீஸ் சுங்கத், 1978-ம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்தவர். 1956-ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்தார். எம்.எஸ்சி (விலங்கியல்) பட்டதாரி.
இவர் உயர்கல்வி, கால்நடை பராமரிப்பு, வேளாண்மை உள்ளிட்ட துறைகளின் செயலாளராக பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு எரிசக்தி முகமை தலைவர், தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைவர் போன்ற பொறுப்புக்களையும் வகித்துள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.
மோகன் வர்கீஸ் சுங்கத், தேசிய ஸ்க்ராபிள் (எழுத்துக்களை வைத்து விளையாடுவது) சாம்பியன் பட்டம் வென்றவர். இந்த விளையாட்டில் உலக உளவில் 21-வது இடத்தில் இருந்தவர். குறுக்கெழுத்து விளையாட்டிலும் வல்லவரான வர்கீஸ், அது தொடர்பான புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
மனைவியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி
இவரது மனைவி ஷீலாராணி சுங்கத்தும் ஐஏஎஸ் அதிகாரிதான். தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் அவர், தமிழக கைவினைப் பொருள் கழகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக பதவி வகித்து வருகிறார். மோகன் வர்கீசும், ஷீலாராணியும் ஒரே நாளில் பணியில் சேர்ந்தவர்கள்
ஷீலாராணி சுங்கத், கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1978ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், சுகாதாரத்துறை செயலாளர், உள்துறை செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
நேர்மையான அதிகாரி
தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பான், பிரெஞ்சு ஆகிய 5 மொழிகளில் அற்புதமான ஆற்றல் பெற்றவர். மிகவும் கண்டிப்பும் நேர்மையும் கொண்ட அதிகாரி என்று பெயர் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
41 வது தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தலைமை செயலாளர் அந்தஸ்தில் அரசு ஆலோசகர் என்ற பதவியில் இருக்கிறார் ஷீலா பாலகிருஷ்ணன். ஆனால் அவருக்குப் பின்னர் தலைமைச் செயலாளராக பதவியேற்ற மோகன் வர்கீஸ் சுங்கத் திடீரென டம்மியான போஸ்டுக்கு மாற்றப்பட்டதன் பின்னணி என்னவாக இருக்கும் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.