உதவி கமிஷனர் ஆபிஸ் அருகே கொட்டிக் கிடந்த வங்கி லேபிள்கள்... வாக்காளர்களுக்குப் பணம் தரப்பட்டதா?
திருச்சி: திருச்சி உதவி ஆணையர் அலுவலகமருகே ரூபாய் நோட்டுகளில் சுற்றப்படும் காகித பட்டைகள் கொட்டிக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற மே மாதம் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் திருச்சி பொன்மலை பகுதியில் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் அருகே சாலையோரம் ரூபாய் நோட்டு கட்டில் சுற்றப்படும் வங்கி பெயர் அடங்கிய காகித லேபிள்கள் கத்தை, கத்தையாக கிடந்தன. அவற்றில் திருச்சியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஒரே இடத்தில் வங்கி பட்டைகள் கிடந்ததை கண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் விரைந்து வந்து பட்டைகள் கிடந்ததை பார்வையிட்டனர். தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வங்கிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட பணம் பிரிக்கப்பட்டிருக்கலாமா என அதிகாரிகள் சந்தேகமடைந்தனர்.
தற்போது வங்கிகளின் நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் கண்காணித்து வருவதால் மொத்தமாக பணம் எடுப்பது சிரமமாகும். இதனால் ஏற்கனவே வங்கிகளில் இருந்து எடுத்து வைக்கப்பட்ட பணத்தை மறைவான இந்த இடத்திற்கு கொண்டு வந்து பிரித்து அனுப்பி இருக்கலாம் என கருதினர். இதுகுறித்து பொன்மலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி பட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.
காகித வங்கி பட்டைகளில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிகள் அனைத்தும் திருச்சி மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள வங்கிகளாகும். எனவே பட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். வங்கி பட்டைகள் போடப்பட்டிருந்த பகுதியை சீரமைப்பதற்காக அங்கு உள்ள முட்புதர்களை போலீசார் தீவைத்து எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications