அடேயப்பா.. அதிமுகவில் சீட் கேட்டு 20,000 பேர் மனு... எத்தனை பேருக்கு எம்.எல்.ஏ யோகம் இருக்கோ?
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுகவில் 20,000 பேர்வரை விருப்பமனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் 3 நாட்கள் வரை அதாவது பிப்ரவரி 6ம் தேதி வரை விருப்பமனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மனு அளிப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் 5000 பேர்வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர்கள் தேர்வில் அனைத்து முக்கிய கட்சிகளும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட பல கட்சிகள் பெற்று வருகின்றன.
முந்திய அதிமுக
தேர்தல் களத்தில் அதிமுகவே முந்திக்கொண்டு விருப்பமனு விண்ணப்பத்தை விற்பனை செய்தது. கடந்த 20ம் தேதி முதல் அ.தி.மு.க. பிரமுகர்கள் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.
20,000 மனுக்கள்
நேற்று மாலை வரை சுமார் 20 ஆயிரம் பேர் அதி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். அ.தி.மு.க.வில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏராளமான புதுமுகங்களும், பெண்களும் தேர்தலில் போட்டியிட விருப்பத்துடன் மனு கொடுத்துள்ளனர். இன்று கடைசி நாள் கூறப்பட்டதால் நேற்று ஏராளமானோர் மனுக்கள் வாங்க குவிந்தனர்.
பிப்ரவரி 6வரை மனு
தொண்டர்களின் ஆதரவினை பார்த்து மேலும் 3 நாட்கள் வரை அதாவது பிப்ரவரி 6ம் தேதிவரை விருப்பமனுக்கள் தாக்கல் செய்யலாம் என அதிமுக கட்சித்தலைமை அறிவித்துள்ளது.
234 தொகுதிகளிலும் ஜெ.விற்கு மனு
இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் நிறையபேர் போட்டி போட்டு விருப்ப மனுக்களை பெற்றனர். முதல்வர் ஜெயலலிதா பெயரில் இன்றும் நிறையபேர் மனு செய்தனர். 234 தொகுதியிலும் ஜெயலலிதா போட்டியிட கோரி அ.தி.மு.க. பிரமுகர்கள் விருப்ப மனு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தொண்டர்கள் எதிர்பார்ப்பு
தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் தேர்தலில் போட்டியிட இந்த அளவுக்கு தொண்டர்கள் மனு செய்யவில்லை. முதல்வர் ஜெயலலிதா தங்களுக்கும் ஒரு வாய்ப்பு தருவார் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் பணம் கட்டி மனு கொடுத்துள்ளனர். குக்கிராமங்களை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கூட இந்த தடவை எதிர்பார்ப்புடன் மனு கொடுத்துள்ளனர்.
நேர்காணல்
அ.தி.மு.க.வினர் கொடுத்துள்ள விருப்ப மனுக்கள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அதில் தகுதியுள்ள அ.தி.மு.க.வினர் பட்டியல் தயாரிக்கப்படும். அவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு பின்னர் முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை தயாரித்து வெளியிடுவார்.
எத்தனை பேர் எம்.எல்.ஏவோ?
இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 234 தொகுதிக்கு 20ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் எத்தனை பேருக்கு சீட் கிடைக்குமோ? எத்தனை பேர் ஜெயித்து சட்டசபைக்கு வந்து மேஜையை தட்டப்போறாங்களோ தெரியலையே!