இறந்தவரை அடக்கம் செய்யப் போய் மலைத் தேனீயிடம் மாட்டிக் கொண்ட மக்கள் - நாமக்கல்லில் பரபர!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இறந்தவரை அடக்கம் செய்ய சென்றவர்களை மலைத் தேனீக்கள் துரத்தி, துரத்தி கடித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அடுத்த, சேளூர் செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர், கடந்த 15 ஆண்டுளாக நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இறந்தார்.
அதை தொடர்ந்து அவரது உறவினர்கள், நேற்று மயானத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட புகை மூட்டத்தில் அருகிலிருந்த வேப்பமரத்தில் கூடு கட்டியிருந்த மலைத்தேனீக்கள் திடீரென கூட்டம் கூட்டமாக வந்து இறுதி சடங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களை துரத்தி துரத்திக் கொட்டியது.
குறிப்பாக வெள்ளை சட்டை அணிந்திருந்தவர்களை குறிவைத்து தாக்கியது. அதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்து, சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு நாலாபக்கமும் சிதறி ஓடினர்.
இதனால், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 27 பேர் உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிலர் நாமக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு மணி நேரம் கழித்து பாண்டியனின் உடல் வைக்கபட்டிருந்த மயானத்துக்கு அருகில் இருந்த கரும்பு வெட்டப்பட்டு சாறுகளுடன் இருந்த காட்டுக்கு தீ வைக்கப்பட்டது.
அந்த புகையில் மலைத்தேனீக்கள் கூட்டைவிட்டு பறந்து சென்றன. அதை தொடர்ந்து மயானத்துக்கு சென்ற பாண்டியன் உறவினர்கள் வெள்ளை சட்டையை கழற்றி வைத்துவிட்டு இறந்தவர் உடலை அடக்கம் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
"மலைத்தேனீக்களை இரவு நேரத்தில் தான் அழிக்க முடியும்" என தெரிவித்த தீயணைப்பு வீரர்கள் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள ஊராட்சி நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.