என்னை கேலி செய்தனர்… வெட்டிக்கொன்றேன்: 5 கொலை செய்த ராணுவ வீரர் வாக்குமூலம்
மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் அருகே மனைவி, மாமனார் உள்பட அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்த வழக்கில், ராணுவ வீரர், அவரது தாய், தம்பி ஆகியோர் செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்டனர்.
மனைவியின் குடும்பத்தினர் தான் பணிபுரியும் ராணுவ அலுவலகத்துக்கு புகார்கள் அனுப்பி நிம்மதியை கெடுத்ததால் அவர்களை வெட்டிக் கொன்றதாக கைதான ராணுவ வீரர் கமலக்கண்ணன் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பேரையூர் அருகே உள்ள ஏ. தொட்டிபட்டியை சேர்ந்த பொன்.ராமலிங்கம் மகன் கமலக்கண்ணன். ராணுவ வீரரான இவருக்கும், மங்கள்ரேவு கிராமத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகள் கோமதிக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இதனிடையே, ஏ. தொட்டியபட்டியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற உறவினர் இல்ல நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சின்னச்சாமி சென்றார். அங்கு கமலக்கண்ணனின் சகோதரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், கமலக்கண்ணன், தனது சகோதரர் பரமசுந்தருடன் சேர்ந்து சின்னச்சாமி, அவரது மனைவி ராமுத்தாய், மகள்கள் பாக்கியலட்சுமி, கோமதி, வனரோஜா ஆகியோரை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தார்.
இதுதொடர்பாக சின்னச்சாமியின் அண்ணன் மகன் லோகநாதன் நாகையாபுரம் போலீசில் புகார் செய்தார்.அதன்படி போலீசார், கமலக்கண்ணன், பரமசுந்தரம், தாயார் சுப்புலட்சுமி, சகோதரி பூரணகலா, அவரது கணவர் வெங்கடேசன், ஆகியோர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வெங்கடேசன் தவிர மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
போலீசில் கமலக்கண்ணன் அளித்த வாக்குமூலம்:
"2008-இல் கோமதியுடன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் 4 மாதங்களிலேயே பிரிந்து விட்டோம். விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினோம். அதன்படி, கோமதிக்கு ஜீவனாம்சமாக மாதம்தோறும் ரூ.6,100 அளித்து வருகிறேன்.
ஆனால் கோமதி, என்னுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக நீதிமன்றத்தில் மனு செய்து அனுமதி உத்தரவையும் பெற்றார். இருப்பினும், உண்மையில் கோமதி என்னுடன் சேர்ந்து வாழ மறுத்தார்.
இதனால், கோமதி பெற்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளேன். இதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.
புகார் மனுக்கள்
மாமனார் சின்னச்சாமி ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதால், என் மீது புகார் தெரிவித்து நான் பணிபுரியும் பிரிவுக்கு மனு அனுப்பினார். இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன்.
மன உளைச்சல்
ராணுவ அலுவலக விசாரணைக்காக நான் அடிக்கடி ஆஜரானேன். பணிபுரிந்த நாட்களைவிட விசாரணைக்கு ஆஜரான நாட்களே அதிகம். சேர்ந்து குடும்பம் நடத்த மறுத்த கோமதி, என்னை நிம்மதியாக வேலைபார்க்கவும் விடவில்லை. இதனால் அதிகமாக விரக்தி அடைந்தேன்.
கடந்த 19ஆம்தேதி விடுப்பில் வந்த நான், கோமதியுடன் சேர்ந்து வாழவேண்டும் அல்லது அவரை ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்தேன். இதற்காக கள்ளத்துப்பாக்கி மற்றும் அரிவாளை வாங்கினேன்.
ஏளனச்சிரிப்பு
சம்பவத்தன்று ஏ.தொட்டியபட்டியில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமதியும் அவரது குடும்பத்தினரும் என்னைப் பார்த்து ஏளனமாக சிரித்தனர். இதை பொறுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன். அதன்பிறகு கோமதியிடம் என் அக்காள் பூரணகலா, ‘என் தம்பியின் வாழ்க் கையை கெடுத்து விட்டாயே' என்று கேட்டதை தொடர்ந்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.
மனைவியிடம் தகராறு
அதுபற்றி என்னிடம் பூரணகலா தெரிவித்ததும் ஆத்திரம் தலைக்கேறிய நான், அரிவாள் மற்றும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கோமதியை தேடினேன். பேருந்து நிலையத்தில் நின்ற அவளிடம், எனது அக்காளுடன் தகராறு செய்தது ஏன் என்று கேட்டேன். பதிலுக்கு அவள் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள்.
வெட்டிக்கொலை
அப்போது கோமதியின் சகோதரிகள் மற்றும் தாய், தந்தை என்னை அடித்து தாக்கினர். ஆத்திரம் அடைந்த நான் துப்பாக்கியால் சுட்டேன். இதில் குண்டு யார் மீதும் படவில்லை. தொடர்ந்து அரிவாளால் கோமதியை மட்டும் குறிவைத்து வெட்ட முயன்றேன்.
இதைப்பார்த்த ஒருவர் தடுத்து என்னை தாக்க முயன்றார்.
5 கொலைகள்
இதனால் அங்கு நின்ற அனைவரையும் சரமாரியாக வெட்டினேன். இதில் கோமதி, அவரது தாயார் மற்றும் சகோதரிகள் ஆகிய 4 பெண்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தப்பி ஓடிய மாமனார் சின்னச்சாமியை அருகில் உள்ள கோவில் அருகே மடக்கிப்பிடித்து கழுத்தை அறுத்துக் கொன்றேன். இவ்வாறு கமலக்கண்ணன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இச் சம்பவத்தில் நாகேஸ்வரி என்பவர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளார். லோகநாதன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் கமலக்கண்ணன், பரமசுந்தர், அவரது தாய் ஆகியோர் மீது 11 பிரிவுகளின் கீழ் நாகையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.