பக்ரீத் கொண்டாட்டம்... தமிழக பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை... தலைவர்கள் வாழ்த்து
சென்னை: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாகப் போற்றப்படுகிறது, பக்ரீத் பண்டிகை. ஒவ்வோர் ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள், 'ஹஜ் பெருநாள் எனப்படும் பக்ரீத்' போற்றிக் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் பெருநாள் தொழுகை முடிந்தபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை பலி கொடுக்கப்படுகிறது.
இப்ராஹிம் நபி செய்த தியாகத்தை நினைவு கூர்ந்து தான், இன்றைய நாளை தியாகத் திருநாள் என்றும், பக்ரீத் என்றும், உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் கடைபிடிக்கின்றனர். இதை ஒரு பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது பக்ரீத் வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தமுமுக சார்பில் பல இடங்களில் சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேபோல பல்வேறு ஊர்களிலும் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன.
இதேபோல், நெல்லை மாவட்டம் கடையநல்லூரிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆறு இடங்களில் பெருநாள் தொழுகை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
தொழுகைக்குப் பிறகு கடையநல்லூரில் ஆயிரக்கணக்கான ஆடுகளும், மாடுகளும் பலி கொடுக்கப்பட்டு, அவை ஏழைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது.