பவானியில் அணை: கேரளாவை கண்டிக்காமல் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசு.. முத்தரசன் சாடல்
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசைக் கண்டிக்காமல் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.
கோவை: கொங்கு மண்டலத்தின் நீராதாரத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சியில் பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் கேரள அரசைக் கண்டிக்காமல் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் சாடியுள்ளார்.
தமிழகத்தின் நீராதாரத்தை சீர்குலைக்க முயலும் கேரள அரசைக் கண்டித்து திமுக, விவசாயிகள் சங்கத்தினர், த.மா.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 21 கட்சிகள், இயக்கங்கள் கோவை, திருப்பூர், ஈரோட்டில் இன்று போராட்டம் நடத்தின. கோவை கா.க.சாவடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது:
காவிரி மேலாண்மை விவகாரம், முல்லைப் பெரியாறு அணை, மேக்கேதாட்டு அணை ஆகிய விவகாரங்களில் தலையிட்டு சுமுக தீர்வு காணாமல் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
ஆனால் வெறும் 17 விவசாயிகளுக்கு மட்டும் தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது ஏற்புடையது அல்ல. உயிரிழந்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும்.
5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் கிடையாது என்று கூறுவது ஏற்க முடியாது. 1 கோடிக்கும் மேல் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாள்களாக உயர்த்தியதில் எந்த பயனும் இல்லை. ஏனென்றால், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு இன்னும் பணப்பட்டுவாடா செய்யவில்லை.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.