இன்று பயணத்தை தொடங்கும் பெங்களூர்-நாகர்கோவில் ரயில்…
நாகர்கோவில்: பெங்களூரு - நாகர்கோவில் இடையே தினசரி ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
கடந்த ரயில்வே பட்ஜெட்டில், 'பெங்களூரு - நாகர்கோவில் இடையே, தினசரி ரயில் இயக்கப்படும்' என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பெங்களூரில் உள்ள, பனாஸ்வாடி ரயில் நிலையத்தில் இருந்து இன்று நாகர்கோவிலுக்கு ரயில் இயக்கப்படுகிறது.
இப்புதிய ரயில் (எண்.17235), பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:50 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். அங்கிருந்து, மாலை 4:25 மணிக்கு புறப்படும் ரயில் (எண்.17236) மறுநாள் காலை 9:05 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
இந்த ரயிலில் ஒரு 'ஏசி' இரண்டடுக்கு பெட்டி,இரண்டு 'ஏசி' மூன்றடுக்கு பெட்டி,ஒன்பது, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி,மூன்று இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஆகியவை இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது..
இந்த ரயில், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், ரயில் நிலையங்கள் வழியாக பயணிக்கும்.
முன்னதாக, நாகர்கோவில் இருந்து பெங்களுருக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் 15 ஆண்டுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பயனாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இம்மார்க்கத்தில் வாராந்திர ரயில் இயக்கப்பட்டது.ஆனாலும் தினசரி ரயில் இயக்கப்படவில்லை.
தொடர்ச்சியான கோரிக்கைகளின் பயனாக ரயில்வே கடந்த 2013ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் நாகர்கோவில் - பெங்களுருக்கான புதிய தினசரி ரயிலை அறிவித்தது. பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணையில் தினசரி ரயிலுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.
ஆனால் ஓராண்டு ஆகியும் தினசரி ரயிலுக்கான இயக்கத்தை இழுத்தடித்து வந்ததாக பயணிகள் சோகத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் தற்போது ரயில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.