டிடிவி. தினகரன் பட்டபகலில் பச்சைப்படுகொலை செய்துவிட்டார்... விலகிச் செல்ல நாஞ்சிலார் சொன்ன காரணம்!
அண்ணாவும் திராவிடமும் இல்லாத டிடிவி. தினகரன் அணியில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அண்ணாவும் திராவிடமும் இல்லாத டிடிவி.தினகரன் அணியில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். டிடிவி. தினகரன் பட்டப்பகலில் பச்சைப் படுகொலை செய்துவிட்டார் என்றும் நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
நாஞ்சில் சம்பத் தமிழகத்தின் சிறந்த அரசியல்வாதி. சிறந்த பேச்சாளர் மற்றும் சிறந்த எழுத்தாளர். கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை எனும் ஊரில் பாஸ்கரன், கோமதி தம்பதியருக்கு மகனாக பிறந்தவர்.
சிறு வயதிலேயே பேச்சில் சிறந்து விளங்கிய இவர் திமுகவில் தலைமைக் கழக பேச்சாளராக இருந்தார். வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போது இவரும் வெளியேறினார்.
தமிழக இலக்கிய அரங்கில் முக்கிய பேச்சாளராகவும், இரண்டாம் கட்ட தலைவர்களில் மிக சிறந்த பேச்சாளராகவும் இருந்தவர் மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்பட்டார். வைகோவின் பேச்சைக் கேட்கக் கூடும் மதிமுக தொண்டர்கள் கூட்டம் போல நாஞ்சில் சம்பத்திற்கும் தனி ரசிகர் கூட்டம் இருந்தது.

மதிமுகவில் இருந்து அதிமுகவிற்கு வந்தார்
மதிமுகவில் ஓரம் கட்டப்படுவதாக மனவேதனையில் இருந்தவர் 2012ம் ஆண்டு அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் முதன்மை பேச்சாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு இனோவா காரையும் கொடுத்திருந்தார் ஜெயலலிதா.

ஜெ. இறப்புக்குப் பின் ஒதுங்கிய நாஞ்சில்
நாஞ்சில் சம்பத் இந்த இனோவா காரில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா மீது அதிருப்தியில் இருந்தவர் கட்சி அலுவலகத்தில் இனோவா காரை ஒப்படைத்தார். ஆனால் சசிகலா நாஞ்சிலாரை அழைத்து சமாதானம் செய்ததால் தொடர்ந்து சசிகலாவின் விசுவாசியாக செயல்பட்டு வந்தார். சசிகலா சிறை சென்ற பின்னர், டிடிவி. தினகரனுக்கு நிழலாக இருந்து அவருடைய அரசியல் நடவடிக்கைகளுக்கு கண்மூடித்தனமான ஆதரவை தெரிவித்தார்.

டிடிவி தினகரனின் நிழலாக செயல்பட்டார்
இந்நிலையில் டிடிவி. தினகரன் கடந்த 15ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய அணியை உருவாக்கினார். இந்த அணியின் பெயரில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் அண்ணாவும் திராவிடமும் இல்லாத அணியில் இருக்க விருப்பமில்லை என்பதால் டிடிவி. தினகரன் அணியில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளார். தலைகளை எண்ணிய தலைவர்களுக்கு மத்தியில் இதயங்களை எண்ணியவர் அண்ணா, மனிதனை மனிதனாக எண்ணியதன் பெயர் திராவிடம். திராவிடமும் அண்ணாவும் இல்லாத இயக்கத்தில் பணியாற்ற விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எந்த கொடியும் தூக்க மாட்டேன்
டிடிவி. தினகரன் அணியில் இருந்து மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசியல் வாழ்வில் இருந்துமே விலகுவதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். உண்மையாக உழைத்தேன், வருத்திக்கொண்டு கடமையாற்றுவதே என்னுடைய இயல்பு. இனி எந்தக் கொடியையும் தூக்க மாட்டேன், எந்த தலைமையின் கீழும் செயல்பட மாட்டேன். அரசியல் என்ற சிமிழுக்குள் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications