தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஏழுமலை வீடு மீதான தாக்குதல்- நாஞ்சில் சம்பத் கண்டனம்
தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏ ஏழுமலை வீட்டில் தாக்குதல் நடந்ததற்கு நாஞ்சில் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : தினகரன் தரப்புக்கு எம்எல்ஏக்களின் ஆதரவு அதிகரித்து விடும் என்ற பயத்தின் காரணமாக பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலை வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் தினகரன் ஆதரவு நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பூந்தமல்லி சட்டசபை உறுப்பினர் ஏழுமலை வீட்டில் இல்லாத நிலையில், குடும்பத்தினரை அச்சுறுத்தி மிரட்டல் விடுக்கும் விதமாக செயல்படுகிறார்கள். எதிர்தாக்குதல் நடத்துவது தினகரனின் செயல்பாடு அல்ல என்பதால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். 20 எம்எல்ஏக்கள் வெளிக்கடையாக ஆதரவு தெரிவித்ததால் மேலும் யாரும் வரக்கூடாது என்பதற்காகவே இது போன்ற செயலை செய்கின்றனர்.
தொண்டர்களின் செல்வாக்கு இல்லாததாலும் பச்சை துரோகத்துக்குக்கு தலைமை தாங்குகிறார் என்பதாலும் வைத்திலிங்கம் நீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் தொண்டர்கள் மத்தியல் செல்வாக்கு நிறைந்த சேகர் நியமிக்கப்பட்டார், அடுத்த சில நிமிடங்களிலேயே ஏராளமான தொண்டர்கள் திரண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுத்ததால் தஞ்சாவூர் காவல் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆபாச அர்ச்சனைகளை செய்து தமிழக அரசியலை ஆபாச குப்பையாக மாற்ற ஓ.பிஎஸ் தரப்பு முயற்சிக்கிறது. அவதூறு, களங்கம் இதையெல்லாம் தாண்டித் தான் ஒரு தலைவன் உருவாகுவான் என்றால் தினகரன் அதற்கு அஞ்சமாட்டார்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.