காங்கிரஸ் ஆட்சிக்கு வராவிட்டால் நான் கண்ணாடியை கழற்றுவேன்: நடிகர் கார்த்திக்
மதுரை: மத்தியில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட காங்கிரஸ் கட்சிதான் அரசு அமைக்க முடியும். இக் கட்சி ஆட்சி அமைக்க முடியாவிட்டால் எனது கண்ணாடியை நான் கழற்றுவேன் என்று வித்தியாமான சபதம் போட்டுள்ளார் நடிகர் கார்த்திக்.
பாஜக - காங்கிரஸ் இடையே நடைபெறும் தர்மயுத்தம் இது. நான் நாட்டின் நலன் காக்கவே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றேன்.
மதுரை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பரத்நாச்சியப்பனை ஆதரித்து நடிகரும், நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது :
வதந்தி பரப்புகிறார்கள்
மதுரை லோக்சபா தொகுதியில் நான் போட்டியிடுவதாக வதந்தி பரப்பினர். நான் சீட் கேட்கவே இல்லை.
மதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளரை அறிவித்து அவர் தேர்தல் பணிகளை தொடங்கிய பின்னர், நான் அவரை போகச் சொல்லிவிட்டு நான் வேட்பாளராக விரும்பவில்லை.
தர்மயுத்தம்
எனக்கு போட்டியிட தொகுதி கொடுத்தும் நான் போட்டியிடாமல், பிரசாரம் செய்து வருகிறேன். இத்தேர்தல் நாட்டின் நலன்காக்கும் தேர்தல். காங்கிரஸ், பாஜக இடையேயான தர்மயுத்தம். காங்கிரஸிடம் தர்மம் உள்ளது.
மோடி ஹீரோவா?
பாகிஸ்தானைப் போல இந்தியா மதச்சார்புள்ள நாடாகிவிடக்கூடாது. குஜராத் கலவரத்துக்கு நரேந்திரமோடி இதுவரை பகிரங்க மன்னிப்புக் கோரவில்லை. அவர் ஹீரோ என்பது சரியல்ல.
நாடாளும் தகுதி
காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே நாடாளும் தகுதி உள்ளது. இது லோக்சபா தேர்தல். சட்டசபைத் தேர்தல் அல்ல. ஆகவே நாட்டை ஆளும் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும்.
உண்மையை சொல்றேன்
தேர்தலுக்குப் பிறகு குறிப்பிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என பேசுவோருக்கு வாக்களிக்கக் கூடாது. அந்தநிலையை ஏற்படுத்திடவேண்டாம்.
நான் யாருக்கும் எதிரியல்ல. உண்மையைத்தான் கூறுவேன். மக்களுக்கு உண்மை தெரியும். அவர்களை ஏமாற்றமுடியாது என்றார் கார்த்திக்.
கார்த்திக் கார் முற்றுகை
கீரைத்துறை ரயில்வே கேட் அருகே கார்த்திக் பிரசாரம் செய்வார் எனவும் அங்குள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பார் எனவும் கூறப்பட்டது. ஆனால், அவ்வழியே வந்த கார்த்திக் கீழே இறங்கவில்லை.
இதனால் அங்கிருந்தோர் கார்த்திக் காரை முற்றுகையிட்டு அவருக்கு எதிராகக் கோஷமிட்டனர். போலீஸார் தலையிட்டு முற்றுகையிட்டவர்களை விலக்கினர். உடனே கார்த்திக் கார் ராமநாதபுரம் நோக்கிச் சென்றது.
நொந்து போன காங்கிரசார்
மதுரை மேலூரில் ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணிக்கு கார்த்திக் பிரசாரம் தொடங்கி, ஒத்தக்கடை, வண்டியூர், செல்லூர், கரிமேடு, பைகாரா என இரவு 9 மணி வரை பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளருக்காக திருமங்கலம், சிவகாசி பகுதியில் கார்த்திக் பிரசாரம் செய்வார் என கூறப்பட்டது.
டபுள் ஆக்ட் போடுவாரோ?
ஒரே நேரத்தில் கார்த்திக் இரு இடங்களில் எப்படி பிரசாரம் செய்வார் என திகைத்த காங்கிரஸார், ஒரு வேளை, சினிமா போல இரட்டை வேடத்தில் பிரசாரம் செய்வாரோ என கிண்டலடித்தபடி வரவேற்க மதுரை விமான நிலையத்துக்குச் சென்றனர்.
வரலையேப்பா...
பகல் 11, மாலை 3.30 என அலைந்ததுதான் மிச்சம். இரவு வருவார்.. .வந்தால் பிரசாரம் எங்கு என்பதை அப்புறம் முடிவுசெய்யலாம் என கார்த்திக் தரப்பினர் கூற, அட எங்களுக்கு வாய்க்கிறவங்க...இப்படியா இருக்கனும் என நொந்த நிலையிலும், கார்த்திக் வந்தால் போதும்..இப்பத்தான் வரணும் என்பதில்லை. எப்போ வந்து பிரசாரம் செய்தாலும் சரிதான்...என முணுமுணுத்தபடி கலைந்தனர்.
வந்துட்டாருய்யா வந்துட்டாரு
ஒருவழியாக திங்கட்கிழமை வந்த கார்த்திக், மானாமதுரை, சிவகங்கை பகுதியில் சிவகங்கை தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
கண்ணாடியை கழற்றிவிடுவேன்
நாட்டில் பாஜக ஆட்சி அமையக் கூடாது. மத்தியில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட காங்கிரஸ் கட்சிதான் அரசு அமைக்க முடியும். இக் கட்சி ஆட்சி அமைக்க முடியாவிட்டால் எனது கண்ணாடியை நான் கழற்றுவேன் என்றார்.
எதற்கு இந்த சபதம்?
எல்லோரும் மொட்டை போடுவேன்... மீசை எடுப்பேன் என்பார்கள். ஆனால் கார்த்திக் ஏன் கண்ணாடியை கழற்றுவேன் என்று சபதம் போட்டார் என்று அங்கிருந்த தொண்டர்கள் கேள்வி எழுப்பியபடி நகர்ந்தனர்.