நரேந்திர மோடி சென்னை வருகை..3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
சென்னை பல்கலைக்கழக நுற்றாண்டு அரங்கில், நானி பல்கிவாலா அறக்கட்டளை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்று பேசுகிறார். இதற்காக மோடி தனி விமானம் மூலம் குஜராத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு பிற்பகல் 3 மணியளவில் வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி மாநில அலுவலகத்துக்கு செல்கிறார். அங்கு கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் மாலை 6 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் கார் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு செல்லும் அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் குஜராத் செல்கிறார்.
சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் - புத்தூரில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அளித்த வாக்குமூலத்தில் தாங்கள் மோடியைக் கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறியதன் விளைவாக அவருக்கு பல மடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர் வருகையின்போது 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. மொத்தம் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இதில் அவர் செல்லும் பாதையில் மட்டும் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விமான நிலையம், பாஜக அலுவலகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.