மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்க துண்டு போடுகிறார் ஜெயலலிதா: வைகோ தாக்கு
விருதுநகர்: மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிக்கும் என்று ஜெயலலிதா கூறுவது எப்படி என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் பிரச்னை குறித்து லோக்சபாவில் குரல் கொடுக்க எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என, மதிமுக பொதுச் செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விருதுநகர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விருதுநகரை சுற்றியுள்ள பெத்தனாட்சி நகர், லெட்சுமி நகர், சிவஞானபுரம், சத்திர ரெட்டியபட்டி, பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது:
மத்திய அரசில் எப்படி?
முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய அரசில் அ.தி.மு.க. அங்கம் வகிக்க வேண்டும் என்று கூறி வருகிறார். அவர் மத்திய அரசில் எப்படி பங்கேற்பார் என்பதை தெளிவுபடுத்திட வேண்டும். 3-வது அணி சார்பில் மத்திய அரசில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதா? என்றால் சாத்தியமே இல்லை.
மூன்றாவது அணி இல்லையே
ஏனெனில் 3-வது அணியே கலைந்து விட்டது. கம்யூனிஸ்டு கட்சிகளையும் கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டார். தேவகவுடா வெளியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற்று பிரதமர் ஆனதைப் போல் ஜெயலலிதா காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற்று பிரதமராக வேண்டும் என்று நினைத்தால் காங்கிரஸ் கட்சியை இந்த அளவுக்கு விமர்சிக்க மாட்டார்.
பெரும்பான்மை கிடைக்கும்
தேர்தலுக்குப் பிறகு பாஜக உடன் இணைந்து மத்திய அரசில் பங்கேற்கலாம் என்று ஜெயலலிதா நினைக்கலாம். பாஜகவைப் பொறுத்தமட்டில் தனிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது. எந்த கட்சியின் ஆதரவும் அதற்குத் தேவையில்லை.
துண்டு போடும் ஜெ
நரேந்திர மோடி பிரதமர் ஆவார். ரயிலில் முன் பதிவு செய்யாதவர்கள் துண்டைப் போட்டு இடத்தை பிடிப்பார்கள். சினிமா கொட்டகையில் மண்ணை குவித்து வைத்து அதன் மேல் துண்டைப் போட்டு இடம் பிடிப்பார்கள். அதேபோல தேர்தலுக்குப் பின் இடம் பிடிக்கலாம் என்று ஜெயலலிதா கருதுகிறாரா?
பிரதமர் கனவு என்ன ஆச்சு
முதல்வர் ஜெயலலிதா பாரத பிரதமர் ஆவார் என்று அ.தி.மு.க. பேச்சாளர்கள் கூறுகின்றனர். அது பற்றி நான் விமர்சிக்க விரும்ப வில்லை. ஓட்டுப் போட தகுதி உடைய எந்த நபரும் தேர்தலில் வெற்றி பெற்று பாரத பிரதமர் ஆக தகுதி உண்டு. ஆனால் மத்திய அரசில் அங்கம் வகிப்போம் என்று பேசி வரும் ஜெயலலிதா எப்படி அங்கம் வகிக்கப் போகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
பணம் பாதாளம் வரை
இந்த தேர்தலில் 2 பக்கம் இருந்தும் பணம் பாயும். ஏழை, எளிய மக்கள் இதற்கு மயங்க மாட்டார்கள். நிச்சயம் என்னை வெற்றி பெறச் செய்வார்கள். என்னை வெற்றி பெறச் செய்து உங்களுக்கு தொண்டாற்ற வாய்ப்பு தாருங்கள் என வேண்டுகிறேன்.
மது ஒழிப்பு பிரச்சாரம்
மது போதையினால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. மதுவை ஒழிக்கக் கோரி 1500 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டேன். இந்த நடைபயணத்தின் போது மதுவால் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை உணர முடிந்தது.
நடைபயணம்
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நடைபயணம் மேற்கொண்டேன். ஈழப்பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்தையும், ஈழத்தமிழர்களையும் வஞ்சித்து விட்டது.
எனவே நான் உங்களுக்கு சேவை செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள். என்றென்றும் உங்கள் ஊழியனாக இருப்பேன்.
மீண்டும் ஒரு வாய்ப்பு
அனைத்துப் பகுதியிலும் மக்களின் பார்வை ம.தி.மு.க. பக்கம் திரும்பி உள்ளது. இந்த நம்பிக்கையோடு தேர்தலை சந்திக்க உள்ளேன். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக, மக்கள் உரிமைகளுக்காக போராடி வருபவன் நான். இப் பகுதி பிரச்னைகள் குறித்தும், தமிழக பிரச்னைகள் குறித்தும் லோக்சபாவில் பேச எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றார்.
பாட்டுக்கு பதில் சொன்ன வைகோ
பிரச்சாரத்தின் போது வைகோ, பேசிக்கொண்டிருக்கும் போதே, பிரச்சார வேனில் இருந்து பாடல் ஒலிக்க ஆரம்பித்தது, அதை சமயோகிதமாக சமாளித்தார் வைகோ.
இன்று பிரச்சாரம்
இன்றைய தினம், லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி, வீட்டு வசதிவாரியக்குடியிருப்பு, உள்ளிட்ட 15 இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.