அணிகள் இணைப்புக்கு தடையே அந்த 2 அமைச்சர்கள் தான்.. நத்தம் விஸ்வநாதன் தாக்கு
இரு அணிகளும் இணைய அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், ஜெயக்குமாரும் தடையாக உள்ளதாக நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
திண்டுக்கல்: அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் ஆகியோர் தடையாக இருக்கிறார்கள் என்று நத்தம் விஸ்வநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக பிளவுபட்டது. பின்னர், சசிகலா குடும்பம் ஓரம் கட்டப்பட்டதை அடுத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணையும் முயற்சிகளை மேற்கொண்டன.
இதற்காக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் பேச்சுவார்த்தை தான் ஆரம்பித்த இடத்திலே இருக்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லை. சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளையும் ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓ.பி.எஸ். அணி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக இரு அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்ததால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதனிடையே நிர்வாகிகளின் ஆதரவை திரட்ட ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி திண்டுக்கல்லில் நேற்று இரவு செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், இரு அணிகளும் இணைய தடையாக இருப்பவர்கள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், ஜெயக்குமாரும் தான் என போட்டு தாக்கினார்.
மேலும் முதல்வராக ஆசைப்பட்டவர்கள் எல்லாம் சிறையில் இருக்கிறார்கள்.ஜெயலலிதாவின் வாரிசான ஓபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றார்.