ஜெ.வை ‘காலி செய்தது’ திண்டுக்கல் சீனிவாசன் ராசிதான்… நத்தம் விஸ்வநாதன் குபீர் குற்றச்சாட்டு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததற்கு காரணம் திண்டுக்கல் சீனிவாசன் ராசிதான் என்று நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்; ஓபிஎஸ் அணியில் உள்ள நத்தம் விஸ்வநாதன், ஜெயலலிதாவின் மரணத்திற்கு திண்டுக்கல் சீனிவாசன் ராசிதான் காரணம் என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலமின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் மரணம் அடைந்ததில் இருந்து அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் தமிழகத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.
குறிப்பாக அதிமுகவில் இருந்து பிரிந்து தனியாக செயல்பட்டு வரும் ஓபிஎஸ் அணியினர், ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அவரது மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகின்றனர்.

நீதி விசாரணை
மேலும், தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர்கள் நடத்தினர். அப்போது இவர்களது அணியில் உள்ள நத்தம் விஸ்வநாதன், ஜெயலலிதா மரணம் குறித்து விரைவில் விசாரணை தொடங்கும் என்றும் குற்றவாளிகள் அனைவரும் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார்.

குற்றச்சாட்டு
ஆனால், இன்று செய்தியாளர்களிடம் பேசிய நத்தம் விஸ்வநாதன், ஜெயலலிதாவின் மரணத்திற்கு திண்டுக்கல் சீனிவாசன் ராசிதான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும், அவர் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னரே யானைகள் அதிகம் மரணம் அடைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜெ. மரணம்
இதுகுறித்து நத்தம் விஸ்வநாதன், "என்னதான் கெட்ட நேரமோ தெரியல. 12 ஆண்டுகள் திண்டுக்கல் சீனிவாசன் வெளியில் இருந்தாரு. இந்த கட்சி நல்லா இருந்தது. திடீரென்னு 10 ஆண்டுகளுக்கு முன் கட்சிக்கு வந்தாரு. அவரு ராசி அம்மாவையும் காலி பண்ணிவிட்டது" என்று கூறியுள்ளார்.

ராசி அப்படி
மேலும், "இந்த யானைகளும் செத்துக்கிட்டு இருக்கு. இந்த ஆட்சியும் சீக்கிரமா போய் சேர்ந்துடுமோன்னு இருக்கு. இவரு ராசி அப்படி. இதை நான் சொல்லவில்லை. மக்கள் அப்படி பேசிக் கொள்கிறார்கள்" என்று நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications