தசரா பண்டிகை: சென்னையில் தாண்டியா நடனம் ஆடி வட இந்தியர்கள் கொண்டாட்டம்
தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை சவுக்கார்பேட்டையில் வடஇந்தியர்கள் விடிய விடிய தாண்டியா நடனம் ஆடி உற்சாகமாக கொண்டாடினர்.
சென்னை: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஜெயின் சமூக மக்கள் தாண்டியா நடனம் ஆடி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
நவராத்திரித் திருவிழாவின் ஒரு பகுதியாக சென்னை சவுகார்பேட்டையில் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகமாக தாண்டியா நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
தசரா பண்டிகையின் போது 10நாட்களும் துர்காதேவியை வழிப்பட்டால் தங்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.
வட இந்தியாவில் தாண்டியா
நவராத்திரி பண்டிகை முன்னிட்டு, வட இந்தியாவில் தாண்டியா என்ற கோலாட்டம் நடன நிகழ்ச்சி 9 நாட்களும் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.30 மணி வரை நடைபெறுகிறது.
பாரம்பரிய நடனம்
திருமணமான மற்றும் திருமணமாகாத இளம் பெண்கள், ஆண்கள் என்று ஆயிரக்கணக்கானோர் துர்கை உள்ளிட்ட பல்வேறு அம்மன் பாடல்களை ஒரு குழுவினர் பாடுவார்கள். அந்த பாடல்களுக்கு ஏற்ப, பாரம்பரிய நடனத்தை ஆண்களும், பெண்களும் வரிசையாக ஆடுவது வழக்கம்.
சென்னையில் தாண்டியா நடனம்
சென்னை சவுக்கார்பேட்டையில் வடஇந்தியர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். அங்கு வசிப்பவர்கள் தசாராவை குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டாடுவது போல பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். விடிய விடிய தாண்டியா நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
உற்சாக நடனம்
10 நாள்கள் நடைபெறும் தசரா விழாவில் தினமும் இரவு முழுவதும் தாண்டியா ஆடி மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். வண்ண உடைகள் அணிந்து வடஇந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் தாண்டியா நடனம் ஆடியது காண்பவர்களையும் உற்சாகப்படுத்துகிறது.
தாண்டியாவிற்கு பரிசு
போட்டிபோட்டு தாண்டியா ஆடுவதில் சிறந்து நடனம் ஆடுபவருக்கு 10வது நாள் அன்று பரிசுகளும் பணமும் தரப்படும் என்று விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.