நள்ளிரவில் தனியார் பள்ளி வாகனங்கள் தீவைப்பு- ரூ. 60 லட்சம் நஷ்டம்: நாமக்கல் அருகே பரபரப்பு
நாமக்கல்: நாமக்கல் அருகே தனியார் பள்ளியின் வாகனங்களை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய பங்குதாரர்களே இந்த சம்பவத்துக்கு யார் காரணம் என சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே பேலுக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று இரவு சுமார் ஒரு மணி அளவில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது.
வாகனங்களின் பெட்ரோல் டேங்குகள் வெடித்ததால் உண்டான சத்தத்தால் திடுக்கிட்டு எழுந்த அக்கம்பக்கதார், இது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் ரூ. 60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக பேலுக்குறிச்சி காவல் நிலையத்தில் பள்ளி தாளாளர் துரைமுருகன் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், முன்னர் 17 பங்குதாரர்களைக் கொண்டு இயங்கியது இப்பள்ளி, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 9 பங்குதாரர்கள் நீக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது, பள்ளிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நீக்கப்பட்ட பங்குதாரர்கள் துண்டுபிரசுரங்கள் மற்றும் போஸ்டர்களையும் அச்சடித்து ஒட்டினர்.
இந்நிலையில், பள்ளி வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதில் அவர்களுக்குத் தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கிறோம்' என அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பேலுக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.