மாணவர்களை மீண்டும் தாக்கினால்.. பழ. நெடுமாறன் கடும் எச்சரிக்கை
ஈழப் போரின் கடைசி நாட்களை வைத்து படம் தயாரித்து வருகிறார் பாரிவேந்தர். புலிப் பார்வை என்ற பெயரில் இப்படத்தை பிரவீண் காந்தி இயக்குகிறார். உலகையே அதிர வைத்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் படுகொலையை வைத்து இந்தப் படத்தை எடுத்து தினசரி நாளிதழ்களில் விளம்பரமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது இந்தக் குழு.
சினிமாவுக்காக ஒரு ஈவு இரக்கமற்ற படுகொலையை சுயநலமாக பயன்படுத்தி காசு பார்க்கத் துடிக்கும் இவர்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மேலும் இப்படத்தில் விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புலிப்பார்வை படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அந்த படத்தை எதிர்க்கும் மாணவர்கள், இரும்புக் கம்பிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதில் 16 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களில் மாறன், பிரபாகரன், செம்பியன், கணேசன், கவுதமன், பிரதீப் ஆகிய 6 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவ் குறித்து தற்போது நெடுமாறன் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். அதில், சென்னை சத்யம் திரையரங்கில், புலிப்பார்வை படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மாணவர்கள் தங்களுக்கு இருந்த ஒரு சில சந்தேகங்களை, விழா ஏற்பாட்டாளர்களிடம் எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு, அங்கு இருந்த சமூக விரோதக் கும்பல், அந்த மாணவர்களை கடுமையான ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளது.
இந்தச் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைப்போன்று வேண்டாத நிகழ்வுகள் தலை தூக்குவது விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று நெடுமாறன் கண்டித்துள்ளார்.