நெல்லையில் கொட்டித் தீர்த்த மழைக்கு 2 பேர் பலி- மாயமானவரை தேடும் பணி தீவிரம்!
நெல்லை: நெல்லையில் விடிய விடிய மழை பெய்ததால், மாநகராட்சி பகுதியில் அனேக இடங்கள் நீரில் மிதந்தன. குறிப்பாக நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் செல்லமுடியாமல் தேங்கியது.
மேயர் புவனேஸ்வரி, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னின்று அடைப்புகளை சரிசெய்தனர். ஜங்ஷன் ஓடையில் மதுபானபாட்டில்கள் அதிக எண்ணிக்கையில் போடப்பட்டிருந்ததால், கழிவு நீர் ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் ஆத்தங்கரைபள்ளிவாசல் அருகே காட்டாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நாகூர்மீரான், திசையன்விளையை சேர்ந்த முத்துராமன் ஆகியோர் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களில் முத்துராமன் மீட்கப்பட்டார்.நாகூர்மீரான் நிலை தெரியவில்லை.
நெல்லையை அடுத்துள்ள சிறுக்கன்குறிச்சியில் விவசாய பணிக்கு சென்ற முப்பிடாதி( வயது 48), மின்னல் தாக்கி பலியானார்.திசையன்விளை அருகே நவ்வலடியில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் மரியபுஷ்பம் (வயது 70), பரிதாபமாக இறந்தார். நெல்லையில் பெய்யும் தொடர்மழையினால் அனேக குளங்கள் நிரம்பிவருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன் தினம் காலையில் இருந்தே மழை பெய்ய துவங்கியது.இதில் ரோடுகள், தெருக்களில் வெள்ளம் சூழந்தது. தொடர் மழை காரணமாக வெள்ள நீர் வடிய வழியின்றி தேங்கி கிடப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் வடிகால்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதால், வெள்ள நீர் வடிகால்களுக்கு செல்லாமல் தேங்கியுள்ளது. திருச்செந்தூர், காயல்பட்டிணம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரை வெளியேற்ற முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் தவித்து வருகின்றன. காயல்பட்டினம்,ஏர்வாடி பகுதிகளில் மழைகாரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்குள்ள பள்ளிவாசலில் இளைஞர்கள் திரண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை தயாரித்து வழங்கினர்.