மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யலாம்.. சட்டசபையில் மசோதா தாக்கல்
மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் வகையில் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை: மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் வகையில் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மேயரை மாநகராட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நடைமுறை நிறுத்தப்பட இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது சட்டசபை கூட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்று தொடர்ந்து நிறைய முக்கிய அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் மாநகராட்சி மேயர்களை மீண்டும் மக்களே தேர்வு செய்யும் வகையில் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் இனி மேயரை போல் நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவரையும் மக்களே தேர்வு செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சட்டசபையில் இந்த மசோதாவை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்தார். இதனால் கடந்த சில வருடங்களாக நடைமுறையில் இருந்த கவுன்சிலர்கள் மேயரை தேர்ந்தெடுக்கும் வழக்கம் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் மேயர்கள், உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவது தடுக்கப்படும். இதன் காரணமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சிறந்த நிர்வாக முறையை கொண்டு வர முடியும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் உள்ளாட்சி பணிகளை இதன் மூலம் விரைந்து முடிக்க முடியும். இதன் காரணமாகவே சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு உள்ளது என்றும் மசோதாவில் கூறப்பட்டு இருக்கிறது.