சேரன்மாதேவி, மானுர்... நெல்லை மாவட்டத்தில் 2 புதிய தாலுகாக்கள் உதயம்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, மானூர் ஆகிய இரண்டு புதிய தாலுகாக்கள் உதயமாகிறது. இவற்றை முதல்வர் திறந்து வைக்கிறார்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையஙகோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம், விகேபுதூர், தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, சங்கரன்கோவில் ஆகிய 11 தாலுகாக்கள் இருந்தன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செங்கோட்டை, தென்காசி,சிவகிரி ஆகிய மூன்று தாலுக்காகளை பிரித்து கடையநல்லூர் தாலுகாவும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சங்கரன்கோவில் தாலுகாவை பிரித்த திருவேங்கடம் தாலுகாவும் புதிதாக தொடங்கப்பட்டது.
இது போல் அம்பாசமுத்திரம் தாலுகாவை பிரித்து சேரன்மகாதேவியை தலைமையிடமாக கொண்டும், நெல்லை தாலுகாவை பிரித்து மானூரை தலைமையிடமாக கொண்டும் ராதாபுரம் தாலுவை பிரித்து திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகாவும் உருவாக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. இந்நிலையில் சேரன்மகாதேவி, மானூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுக்காக்கள் அமைக்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி மானூர் தாலுகாவில் மானூர், கங்கைகொண்டான், தாழையூத்து குறுவட்டாரங்களை சேர்ந்த 30 வருவாய் கிராமங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இது போல் சேரன்மகாதேவி தாலுகாவில் சேரன்மகாதேவி, மேலச்சேவல், முக்கூடல், பாப்பாங்குடி ஆகிய பகுதிகள் இடம் பெறும். இந்த தாலுகாவிற்கு இரண்டு புதிய தாசில்தார்கள் உள்ளிட்ட 47 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு தாலுகாவையும் முதல்வர் ஜெயலலிதா வீடியோ கன்பிரான்ஸ் மூலம் திறந்து வைக்கிறார். இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் தாலுக்காகள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.