”நியூ இயர்” பாதுகாப்பிற்கு சென்னையில் 15,000 போலீசார்- பெண்களைக் கிண்டல் செய்தால்... பிச்சுப் பிச்சு
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வருகிற வெள்ளிக்கிழமையன்று 2016 புத்தாண்டு பிறக்கிறது.
புத்தாண்டு பிறக்கும் போது சாலைகளில் இளைஞர்கள் கார்களிலும், மோட்டார் சைக்கிளிலும் சென்று புத்தாண்டை வரவேற்கும் விதமாக எழுச்சி கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
எனவே சென்னை நகரில் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் வழக்கமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
15 ஆயிரம் போலீசார்
கடந்த ஆண்டு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்த ஆண்டும் கடைபிடிக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் விடிய, விடிய 15 ஆயிரம் போலீசார் சென்னை நகரில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
விடிய, விடிய வாகன சோதனை
மெரினாவில் மட்டும் பாதுகாப்புக்காக ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகிறார்கள். புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் சென்னை நகரம் முழுவதும் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் விடிய, விடிய செயல்படும். அனைத்து சிக்னல்களிலும் போக்குவரத்து போலீசாரும் சட்ட ஒழுங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். வாகன சோதனையும் நடைபெறும். மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
பெண்களுக்கு பாதுகாப்பு
புத்தாண்டு வாழ்த்து சொல்வது போல, பெண்களிடம் கேலி, கிண்டலில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். பெண்களின் கையை பிடித்து குலுக்கி வாழ்த்து சொல்வது தடை செய்யப்படுகிறது.
கலர் வாட்டருக்கு நோ
சாய தண்ணீரை பெண்கள் மீது பீய்ச்சி அடித்து வாழ்த்து சொல்வதற்கும் அனுமதி இல்லை.மொத்தத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிக் கொண்டாட்டம்
இந்நிலையில் வரவிருக்கும் புத்தாண்டினை வரவேற்கும் வகையில் சென்னை வேலம்மாள் கல்லூரியில் முகத்தில் நியூ இயர் வாசகங்களை முக ஓவியங்களாக தீட்டி மாணவிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.