நிர்மலா விவகாரம்: சிபிசிஐடி விசாரணையே போதும்... சிபிஐ தேவையில்லை - ஜெயக்குமார்
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை எதுவும் தேவையில்லை சிபிசிஐடி விசாரணையே போதுமானது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சிபிஐக்கு இணையானது சிபிசிஐடி என்று கூறிய அவர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனைக்கு ஆளாவார்கள் என்றார்.
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் மதிப்பெண்களுக்காக, உயர் அதிகாரிகளுடன் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என்று பேசிய ஆடியோ ஊடகங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்கள், மகளிர் அமைப்பினரின் போராட்டத்தை அடுத்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.
பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான வழியில் நடத்த முயற்சித்ததாக வந்த தகவலை அடுத்து, பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ அமைப்பு இதுகுறித்து விசாரணை நடத்தினால்தான் உண்மைகள் வெளியாகும் என்று கூறினார். எதிர்கட்சியினர் பலரும் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்திய நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உண்மை நிலை கண்டறிந்து யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கபடும். சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்றும் ஜெயக்குமார் கூறினார். இந்த விவகாரத்தில் யாருக்குத் தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை. சிபிஐக்கு இணையானது சிபிசிஐடி என்று கூறிய அவர், பெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் தட்டியது பற்றி கருத்து கூறவில்லை. ஆளுநர் மாளிகைதான் கருத்து தெரிவிக்க முடியும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.