அப்துல் கலாம் பெயரை அரசியல் கட்சிகள் பயன்படுத்தத் தடை இல்லை: தேர்தல் ஆணையம்
சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பெயரை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதற்கு தடை ஏதும் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கனவு கண்ட தமிழகத்தை உருவாக்குவதற்காக, அப்துல்கலாம் லட்சியக் கட்சி என்ற புதிய கட்சியை அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினார்.
அப்துல் கலாம் லட்சியக் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் இன்று பதில் மனு தாக்கல் செய்தது. இதில் அரசியல் கட்சிகள் கலாமின் பெயரை பயன்படுத்த தடையில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவுக்கு பதிலளிக்க முத்து மீரான் மரைக்காயருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முத்து மீரான் மரைக்காயர் ஆகஸ்ட் 2 ம் தேதி பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.