கோவை கல்லூரி ஆசிரியை கொலை வழக்கு.. ஒரு துப்பும் துலங்கவில்லை.. போலீசார் திணறல்!

கோவை மாவட்டம் காரமடையில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் தர்மராஜ். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மாலதி(48). இந்த தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகளான ரம்யா(24) கோவையை அடுத்த கிணத்துக்கடவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலைபார்த்து வந்தார்.
மொகரம் பண்டிகை விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த ரம்யா கடந்த 3-ஆம்தேதி நள்ளிரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். படுக்கை அறையில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
அவரது தாயார் வீட்டின் மற்றொரு அறையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரம்யா கொலையில் துப்பு துலக்க 7 தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டார். அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இன்னும் உருப்படியாக எந்த துப்பும் கிடைக்கவில்லை.
சுயநினைவு திரும்பியதும் மாலதியிடம் விசாரித்தனர். அப்போது அவர் சம்பவத்தன்று நள்ளிரவு சிலர் வீட்டுக்குள் புகுந்து என்னை தாக்கினர். நான் மயங்கி விட்டேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியாது என தெரிவித்தார். மாலதியின் தகவலை மலை போல் நம்பியிருந்த போலீசாருக்கு இது பெருத்த ஏமாற்றமாகி விட்டது.
இந்த நிலையில் போலீசார் கொலை நடந்த அன்று ரம்யாவுடன் பேசியது யார்? வாட்ஸ்-அப்பில் அவரை தொடர்பு கொண்டது யார்? என்று விசாரித்தனர். அப்போது 2 பேர் சிக்கினார்கள். அதில் ஒருவர் நான் ரம்யாவை அக்காவாக நினைத்து தான் பழகினேன் என்றார். மற்றொருவர் மொகரம் பண்டிகை விடுமுறைக்காக வீட்டுக்கு கிளம்பிய ரம்யாவை பத்திரமாக செல் என்று கூறினேன். அதன் பின்னர் பேசவில்லை என்றார். இதனால் யாரிடம் இருந்தும் முழுமையான தகவலை பெற முடியவில்லை.
இந்த நிலையில் திருச்சி, சென்னை வாலிபர்களும் ரம்யாவுடன் செல்போனில் பேசியது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரிப்பதற்காக தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
ரம்யா கொலை தொடர்பாக துப்பு துலக்க முதலில் 5 தனிப்படைகள் தான் அமைக்கப்பட்டன. அவர்களின் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் 7 தனிப்படைகளாக அதிகரிக்கப்பட்டது.
அவர்கள் ரம்யாவின் உறவினர்கள், நண்பர்கள், அவருடன் வேலை பார்த்தவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், பொறியியல் கல்லூரியின் மாணவ-மாணவிகள் என பலரிடமும் விசாரித்தனர்.
பல்வேறு கோணங்களில் விசாரித்தும் பலன் இல்லை. மேலும் ரம்யா பயன்படுத்திய செல்போன், சமூக வலைதளங்கள் என அனைத்தையும் போலீசார் ஆராய்ந்தனர். அதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை.
ரம்யா, மாலதி, தர்மராஜ் ஆகிய மூவரின் செல்போனுக்கு, சமீபத்தில் போன் செய்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை நடந்த போது, அந்த வீட்டில் ரம்யாவின் தாய் மாலதியும் இருந்துள்ளார். தற்போது இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் தீவிர விசாரணை செய்தால் மட்டுமே குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும் என நம்பும் போலீசார் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications